வழிபாட்டுத் தலம்
சோழமாதேவி கைலாயமுடையார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சோழமாதேவி கைலாயமுடையார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கைலாயமுடையார் கோயில் |
| ஊர் | சோழமாதேவி |
| வட்டம் | T.பாலூர் |
| மாவட்டம் | அரியலூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கைலாயமுடையார் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | முதலாம் இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன், வீரராஜேந்திரன் ஆகியோரது 15 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் தென்கரை பிரம்மதேயம் ஸ்ரீசோழமாதேவி சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடப்படுகிறது. பிரம்மசூத்திரத்திற்கு ஆதிசங்கரர் எழுதிய சாரீரக பாஷ்யத்திற்கு சிதாநந்த படாரர் என்பவர் எழுதிய பிரதிபகம் என்னும் உரையை இவ்வூரில் விரிவுரை நிகழ்த்துவதற்கு சோழமாதேவி சபையாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை வீரராஜேந்திரனது கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. மேலும் இவ்வூரில் உய்யக்கொண்டான் ஆற்றுவாரியம் என்ற அமைப்பு இருந்ததையும் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. சோழமாதேவியில் எடுப்பிக்கப்பெற்ற திருவிழாக்கள் பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலின் கருவறை புறச்சுவர் தேவகோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுள், மேற்கில் திருமால், வடக்கில் நான்முகன், அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகர், வடக்கில் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பஞ்சரக்கோட்டத்தில் முனிபத்தினியும் பிச்சையேற்கும் பெருமானும சிற்பங்களாக அமைந்துள்ளனர். இக்கோயில் முகமண்டபத்தில் முற்காலச்சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருமால், சண்டேசர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. கோயில் அர்த்தமண்டபத்தில் நுழைவாயிலில் வாயிற்காவலர்கள் நின்ற நிலையில் பேரளவினராய் உள்ளனர்.. இச்சிற்பங்கள் அனைத்தும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளன. மேலும் கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
காவிரி தென்கரை பிரமதேய ஊரான சோழமாதேவி சதுர்வேதி மங்கலமாகும். நான்கு வேதங்கள் அறிந்த பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊராகும். இவ்வூரில் ஆதிசங்கரரின் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதிய சிதாநந்த படாரர் என்பவரின் விரிவுரை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது சிறப்பு. ஆதிசங்கரரைப் பற்றிய தொன்மையான கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்றாகும். சோழர்களைப் பொறுத்தவர சோழமாதேவி கலைக்கோயில் ஒரு தனித்துவமாய் இருந்திருத்தல் வேண்டும். சோழ அரசியாரின் பெயரில் அமைந்த இக்கலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இங்கு நடந்த விழாக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தென்கரை ஊரான சோழமாதேவியில் மாசிமகம், ஆனித்திருவிழா ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆற்றங்கரை ஊர்களில் மாசிமகம் நீராட்டு விழா நடைபெறுதல் இயல்பு. காவிரியின் மேல் காதல் கொண்ட சோழர்கள் அதன் இருகரைகளிலும் முன்னாளிலிருந்து கோயில் எடுப்பித்து வருதல் மரபு. அவ்வாறு இராஜராஜனால் எடுப்பிக்கப்பட்ட இக்கோயிலும் தனிச் சிறப்புடையதாகும். இராஜராஜன் தான் கட்டிய தஞ்சை பெரியகோயிலுக்கு தட்சிணமேரு என்று பெயரிட்டான். சோழமாதேவியில் கட்டிய இக்கோயிலுக்கோ கைலாயமுடையார் என்று பெயரிட்டுள்ளான். கைலாயத்தின் மேல் காதல் கொண்டவன் போலும். கல்லால் கறைகண்டனுக்கு கோயில் எடுப்பித்தவன் கைலாயத்தில் நிலைத்திருப்பான் என்ற பழமொழிக்கேற்ப இக்கோயிலை கட்டியுள்ளான் போலும்.
|
|
சோழமாதேவி கைலாயமுடையார் கோயில்
| கோயிலின் அமைப்பு | முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக இருந்திருக்க வேண்டும். தற்போது தளப்பகுதி விமானம் புனரமைக்கப்பட்டுள்ளது. இரு தளங்களை உடையதாக இக்கோயில் தற்போது உள்ளது. கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதற்குமேல் சுதைப்பூச்சாகவும் காணப்படுகின்றது. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் கைலாயமுடையார் இலிங்க வடிவில் உள்ளார். சதுரவடிவ கருவறையில் ஆவுடையார் சதுரவடிவில் உள்ளது. பெரும்பாலும் சதுரவடிவ ஆவுடையார் பாண்டியர்களின் கலைப்பாணியைச் சுட்டும். ஆனால் இங்கு சோழர்கள் கலைப்பாணியில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்காவலர்கள் பேரளவினராய் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் வேறுபட்ட ஆடை, அணிகலன், தோற்றமுடையவராய் உள்ளனர். முகமண்டபத்தில் சோழர்கால தனிச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சண்டேசர், அம்மன், சூரியன் ஆகியவை குறிப்பிடத்தக்கது. கருவறை விமானத்தின் புறச்சுவர்களில் தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் அவ்வவற்றிற்குரிய தெய்வத் திருவுருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்திலும், சுவர்ப்பகுதியிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழமன்னர்கள் இராஜராஜன், ராஜேந்திரன் இவர்களது காலத்து தமிழ்க் கல்வெட்டுகளும், வீரராசேந்திரன் காலத்து கிரந்தக் கல்வெட்டும் காணப்படுகின்றன. இவ்வூர் நான்கு வேதங்கள் அறிந்த பிராமணர்களுக்கு பிரமதேயமாக வழங்கப்பட்ட ஊராகும். பிரமதேயமாக வழங்கப்பட்ட ஊர்களின் நடுவே சிவன்கோயிலும், விஷ்ணு கோயிலும் கட்டி சிறப்பிக்கச் செய்வது மன்னர்களின் வழக்கம். இம்முறை பல்லவர் காலத்திலிருந்தே பின்பற்றப்படுகிறது. அவ்வழியே சோழமாதேவியிலும் சிவன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | நாவல்பட்டு ஏரி, திருப்பனந்தாள், திருவிடைமருதூர் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 334 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி வழியாக சோழமாதேவி செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
சோழமாதேவி கைலாயமுடையார் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | சீர்காழி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | திருச்சி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | மதுரை கோ.சசிகலா |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 101 |
| பிடித்தவை | 0 |