வழிபாட்டுத் தலம்
தஞ்சை கொங்கணீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தஞ்சை கொங்கணீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கொங்கணீஸ்வரர் |
| ஊர் | தஞ்சாவூர் |
| வட்டம் | தஞ்சாவூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கொங்கணேசுவரர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஞானாம்பிகை, அன்னபூரணி |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | காவிரி |
| ஆகமம் | மகுடாகமம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | வைகாசி பெருவிழா, நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / மராட்டிய மன்னர் ஏகோஜி |
| கல்வெட்டு / செப்பேடு | இரண்டாம் ஏகோஜி மன்னர் கால இரண்டு செப்பேடுகள் இங்கு கிடைத்துள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் கொங்கணேசுவரர் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் விநாயகர் சிற்பம் உள்ளது. சூரியன், பைரவர், சனைஸ்சரண் ஆகியோருடைய உருவங்கள் இங்கு அமைந்துள்ளன. அன்னபூரணி திருமுன்னும், ஞானாம்பிகை திருமுன்னும் தனித்தனியே இக்கோயிலில் அமைந்துள்ளன. இரண்டு திருமுன்களிலும் அம்மன் அருள்பாலிக்கிறார். நால்வர் சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. தேவக்கோட்டங்களில் வேறு இறையுருவங்கள் வைக்கப்படவில்லை. |
| தலத்தின் சிறப்பு | 300 ஆண்டுகள் பழமையானது. மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சோழமன்னர்களின் இரண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. கொங்கணச்சித்தர் வழிபட்ட தலம் இது |
|
சுருக்கம்
தஞ்சாவூர் மேலராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது. கொங்கணச் சித்தர் நிறுவிய கொங்கணேசுவரர் இங்கு அருள்பாலிக்கிறார். இங்கு சில கல்வெட்டுகளும், இரண்டாம் ஏகோஜி மன்னரின் இரண்டு செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மகாத்மியம் என்னும் ஏட்டுப்பிரதிகளில் உள்ள பவிஷ்யோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக கொங்கண முனிவர் வழிபட்ட கொங்கணேசுவரர் பற்றிக் கூறப்பட்டுள்ளன. கொங்கணர் கடைக்காண்டம், திரிகாண்டம், ஞானகுளிகை ஆகிய வைத்திய நூல்களை இயற்றியவர். மராட்டிய மன்னர்கள் காலத்தில் (1832-1855) எழுதப்பட்ட தெலுங்கு மொழிக் காவியமான அன்னபூர்ணா பரிணயமு என்ற நூலில் தஞ்சை நகரச் செட்டியார் ஒருவரின் வளர்ப்பு மகளான அன்னபூரணா தேவி என்பவள் கொங்கணேசுவரரிடம் அளவற்ற பக்திகொண்டு அவரையே மணந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
|
|
தஞ்சை கொங்கணீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இறைவன் கருவறை, ஞானாம்பிகை அம்மன் கருவறை, அன்னபூரணி கருவறை என்ற மூன்று கருவறைகள் தனித்தனியே இங்கு அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானம் இரு தளங்களைக் கொண்டுள்ளது. முற்றிலும் புனரமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாகவும், அதன் மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோட்டங்களில் சுற்றுத் தெய்வங்கள் கணபதியைத் தவிர காணப்படவில்லை. சுவர்களில் அரைத்தூண்களும், கோட்டங்களும், இருகோட்டங்களுக்கிடையே கும்பப் பஞ்சரமும் அமைந்துள்ளன. பிற்காலப் பணியாக மகாமண்டபம் அமைந்துள்ளன. இதில் யாளித்தூண்கள் இடம் பெற்றுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தஞ்சாவூர் பெரிய கோயில், வடபத்ரகாளியம்மன் கோயில், கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயில் |
| செல்லும் வழி | தஞ்சாவூர் மேலராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று சக்கர வாடகை உந்தியில் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 39 |
| பிடித்தவை | 0 |