வழிபாட்டுத் தலம்
திருப்பாசூர் ஸ்ரீவாசீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருப்பாசூர் ஸ்ரீவாசீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சோமாஸ்கந்தர் |
| ஊர் | திருப்பாசூர் |
| வட்டம் | திருவள்ளுர் |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| தொலைபேசி | 044 - 2788 5247 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஸ்ரீவாசீஸ்வரமுடையார் |
| தாயார் / அம்மன் பெயர் | தங்காதலி |
| தலமரம் | மூங்கில் |
| திருக்குளம் / ஆறு | சோமதீர்த்தம், மங்களதீர்த்தம் |
| ஆகமம் | காமீகம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | வைகாசி பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் 16 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுக் குறிப்பின் படி இத்தலம் தொண்டைமண்டலத்து ஈக்காட்டுக் கோட்டத்து காக்கலூர் நாட்டு திருப்பாசூர் எனக் குறிப்பிடப்படுகிறது. இத் தலத்துக் கல் வெட்டால் அறிய வருவன : இராச ராசன் பூசைக்காக நாற்பத்தேழு பொன் காசு தந்துள்ளனன். விளக்கிற்காக முப்பத்திரண்டு. பசுவும், முரச வாத்தியத்திற்காக ஓர் எருதும் கொடுக்கப்பட்டன. குலோத்துங்கன் காலத்தில் ஒரு மாது திரு ஆபரணத்திற்காக முப்பது பொன் காசும், நாள் ஒன்றுக்கு இரண்டு படி அரிசியும். தந்துள்ளனள். காலிங்கராயன் என்பான் பத்து விளக்குகளின் பொருட்டு எழுபத் தெட்டுப் பொன் காசுகள் கொடுத்துள்ளான். ஒருவன் ஒரு தோட்டத் தையும் கோவிலுக்கு அளித்துள்ளான். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் வாசி என்னும் கருவியால் வெட்டுண்ட இலிங்கமாக இறைவன் காட்சி தருகிறார். இறைவன் கருவறைக்கு வலப்பக்கத்தில் தங்காதலி அம்மனுக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. இவ்விரு கருவறைகளுக்கும் நடுவே சுப்ரமண்யருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. இங்கு விநாயகர் சபை எனப் பெயர் பெற்றதாக 11 விநாயகர் சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தேவகோட்டங்களில் ஆலமர்ச்செல்வன், அண்ணாமலையார், நான்முகன் ஆகிய சிற்பங்களும், அர்த்தமண்டப வெளிப்புறக் கோட்டங்களில் கணபதியும், துர்க்கையும் அமைந்துள்ளனர். சொர்ணகாளிக்கு தனியே சிறுகோயில் அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரே நடராசருக்கு தனி சிறுகோயில் அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 900 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் வட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த இத்திருக்கோயில் தேவார மூவராலும் பாடல் பெற்றது. கி.பி.6-நூற்றாண்டிலேயே இக்கோயில் செங்கற் தளியாய் இருந்திருக்கவேண்டும். பின்பு சோழர்கள் காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு காணப்படுவதைக் கொண்டு இம்மன்னன் இங்கு தனது ஆட்சியாண்டில் திருப்பணிகளை செய்துள்ளான் என அறியமுடிகிறது. இங்குள்ள தேவகோட்ட சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. தொண்டை மண்டலத்திற்கே உரிய தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்ததாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. திருச்சுற்று மாளிகைக் கொண்ட இக்கோயில் தற்காலத்திலும் மூங்கில் வனமாகக் காட்சியளிக்கிறது. கரிகால் சோழன் ஆட்சிகாலத்தில் இப்பகுதியில் ஆண்டுவந்த குறும்பர்களை அடக்கி வென்றதாகவும், அதற்கு துணைபுரிந்த சிவபெருமானுக்கு இவ்விடத்தில் ஆலயம் கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எனவே இக்கோயில் சோழர்களாலேயே கட்டப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. இராமலிங்க வள்ளலார் இத்தலத்திற்கு வருகை புரிந்து இத்தலத்தைப் பாடியுள்ளார்.
|
|
திருப்பாசூர் ஸ்ரீவாசீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இங்குள்ள இராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது. இக்கோயில் கருவறை விமானம் தூங்கானை மாட வடிவமுள்ளதாக (கஜபிருஷ்டம்) அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அரை நீள்வட்டமுடையதாக அமைந்திருக்கிறது. அர்த்தமண்டபம், முக மண்டபம் பெற்று விளங்குகிறது. கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவர்களில் அரைத்தூண்கள் அமைந்த தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களிலும் வடக்கிலும் தெற்கிலும் கோட்டங்கள் அமைந்துள்ளன. இந்த கோட்டங்களில் இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சிறுகோயில் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே நடராசர் ஆலயம் அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வடாரண்யேஸ்வரர் கோயில், சுவாமிநாத பாலமுருகன் கோயில் |
| செல்லும் வழி | திருவள்ளுரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 37 |
| பிடித்தவை | 0 |