வழிபாட்டுத் தலம்
திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருமயம், சத்யசேத்திரம், சத்யகிரி, சத்யபுரம் |
| ஊர் | திருமயம் |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | ஸத்யகிரி நாதன் |
| தாயார் / அம்மன் பெயர் | உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார் |
| தலமரம் | அரச மரம் (அஸ்வத்தம்) |
| திருக்குளம் / ஆறு | கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம் |
| வழிபாடு | இரு கால பூசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பாண்டியர் |
| சிற்பங்கள் | நீண்ட பிரமாண்டமான கிடந்த திருக்கோலம். சுவரில் பிரம்மன், முனிவர்கள், கருடாழ்வார் நின்ற கோலம். விஸ்வக்ஸேனர், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ஆண்டாள், சக்ரத்தாழ்வார், இலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய தெய்வ திருவுருவங்கள் தனித்தனி சன்னிதிகளில் விளங்குகின்றனர். |
| தலத்தின் சிறப்பு | 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலம். குடைவரைக் கோயில். |
|
சுருக்கம்
கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும் சக்தியையும் இவ்விடத்திலிருந்து தான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர். சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால் முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான். இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது. இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது. அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால் அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும். மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும். ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும். தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும். இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்கநாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல தேவர்களும் எழுந்தருளியுள்ளனர். ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றை விட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜுவாலைகள் செல்வது போன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். திருமங்கையாழ்வாரால் மட்டும் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். மெய்யமென்னும் தடவரை மேல் கிடந்தானையென்றும், திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை என்றும், திருமெய்ய மலையாளா என்றும், மெய்யம் அமர்ந்த பெருமாளை என்றும், மெய்யமணாளர் என்றும் இப்பெருமாளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார் திருமங்கையாழ்வார்.
|
|
திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் குடைவரை அமைப்பு முற்காலப் பாண்டியர்களின் கட்டடக் கலையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்லவர்களின் குடைவரைக் கோயில் தாக்கம் இதில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். நீண்ட பிரமாண்டமான கிடந்த திருக்கோலம். சுவரில் பிரம்மன், முனிவர்கள், கருடாழ்வார் நின்ற கோலம். விஸ்வக்ஸேனர், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ஆண்டாள், சக்ரத்தாழ்வார், இலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய தெய்வ திருவுருவங்கள் தனித்தனி சன்னிதிகளில் விளங்குகின்றனர். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமெய்யம் கோட்டை, சத்தியகிரீசுவரர் குடைவரைக் கோயில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் |
| செல்லும் வழி | புதுக்கோட்டையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
திருமெய்யம் சத்தியகிரிநாதப்பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருமயம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | புதுக்கோட்டை |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | புதுக்கோட்டை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 11 May 2018 |
| பார்வைகள் | 127 |
| பிடித்தவை | 0 |