வழிபாட்டுத் தலம்
திரு ஊரகம் ஊரகத்தான் கோவில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திரு ஊரகம் ஊரகத்தான் கோவில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திரு ஊரகம் |
| ஊர் | பெரிய காஞ்சி |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமன் |
| தாயார் / அம்மன் பெயர் | அமுதவல்லி நாச்சியார் |
| திருக்குளம் / ஆறு | நாக தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | திருமழிசையாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். நம்மாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று ஆன்றோர் மொழிவர். திருவூரகத்தில் நின்றபடியை ஆதல் என்பது நம்பிள்ளை ஈடு. இந்த ஒரு திவ்ய தேசத்திற்குள்ளாகவே நீரகம், காரகம்,கார்வானம் ஆகிய திவ்ய தேசத்து எம்பெருமான்களும் திவ்யதேசங்கள் இருப்பதால் இத்தலத்தை தரிசித்தால் நான்கு திவ்ய தேசங்களைத் தரிசித்ததாகி விடும். ஊரகம், நீரகம், காரகம், கார் வானம் ஆகிய நான்கு திவ்யதேசத்து எம்பெருமான்களையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108 திருப்பதியந்தாதியில் இத்தலத்திற்கான பாசுரங்களை இட்டருளினபோது, மகாபலியிடம் எம்பெருமான் மூன்றடி மண்வேண்ட மகாபலி நீர்வார்த்து (தாரை வார்த்துக்) கொடுத்ததை நினைவூட்டுகிறார். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப் பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர் திருமேனி பார்ப்பதற்குப் பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள் இல்லையென்று சொல்லலாம். பேரகத்தான் என்பது இவர் திருநாமம்.இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.இதேபோல் பேரகத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேட எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற நாகமூர்த்தியை வேறெங்கும் காண்டலரிது. இவரிடம் தூய மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது. இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது (பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வெம் பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்) ஊரகத்தான் என்பது திருநாமம். |
| தலத்தின் சிறப்பு | 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
கச்சி ஊரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மக்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “ஊரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. தொண்டை மண்டலத்து இருபத்தியிரண்டு திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஊரகம் என்னும் திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அதாவது இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் இந்த ஊரகம் ஸ்தலத்திற்குள்ளேயே எழுந்தருளியிருக்கின்றனர். இந்த மூன்று திவ்ய தேசங்களும் தொண்டை நாட்டிற்குள் எங்கிருந்தனவென்று அறியமுடியவில்லை.எவ்விதம் மூவரும் இங்குவந்து புகுந்தனர் என்பதும் அறியுமாறில்லை. நிச்சயமாக இத்தலங்கள் காஞ்சி நகருக்கு வெளியே உள்ள திவ்யதேசங்களைப் போன்று எங்காவது தனித்திருந்திருக்க வேண்டும். மதம் அல்லது அரசியல் சார்ந்த யாதாயினுமோர் காரணத்தால் உண்டான விளைவுகளால் இத்தலங்கள் மூன்றும் இடம் பெயர்ந்து அல்லது இப்பெருமான்கள் மூவரும் இடம் பெயர்ந்து இங்கு வந்து சேர்ந்தனர் எனலாம். இம்மூன்றும் காஞ்சிக்கு வெளியில் மிகத் தொலைவிலோ அல்லது காஞ்சிக்கு அருகாமையிலோ ஒன்றுக்கொன்று சமீப தூரத்தினதாகவோ இருந்திருக்க வேண்டும். அதனாற்றான் ஏதோவொரு காரணத்தால் இடம் பெயர வேண்டிய சூழல் உருவானவிடத்து மூவரும் ஒருங்கே பெயர்ந்துள்ளனர். காஞ்சிக்கு வெளியே உள்ள ஊர்களில் இத்தலத்துப் பெயர்களின் சாயல்களை கொண்ட ஊர்களையோ, வரலாற்று ரீதியாக அழிந்துபட்ட அல்லது இன்றைய வரலாற்றுப் போக்கோடு வர இயலாதவாறு மண்டிக் கிடந்து விட்ட ஏதாவது சில தொல்லியல் கோவில்களையோ ஆய்வு செய்யும்போது அல்லது ஆய்வு செய்தால் உண்மை வரலாம். இவைகள் நிச்சயமாக காஞ்சிக்குள்ளே இருந்திருக்க முடியாது. அவ்வாறு இருந்திருப்பின் ஊரகத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கச்சி ஊரகத்தாய் என்று விளிப்பதைப் போல மற்ற தலங்களையும் கச்சி நீரகத்தாய், கச்சி காரகத்தாய் என்று விளித்திருப்பார். ஊரகம் தவிர மற்ற இந்த மூன்று திவ்ய தேசங்கட்கு காஞ்சியின் சம்பந்தத்தை திருமங்கை அருளவில்லை. மேலும் நீரகத்தை மங்களாசாசனம் செய்யும்போது நீரகத்தாய் நெடு வரயினுச்சி மேலாய் (2059) என்று நீரகத்தானுக்கு நெடுவரை வேங்கடத்தானோடு சம்பந்தங் காட்டுகிறார். அதே சமயம், அதே பாடலில் ஊரகத்தானை மங்களாசாசனம் செய்யும் போது “நிறைந்த கச்சி ஊரகத்தாய்” என்று ஊரகத்திற்கும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறார். எனவே காஞ்சிக்கு வெளியே இருந்த இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் அவர்கள் ஊரைவிடுத்து இந்த ஊரகத்திற்குள் வந்தெழுந்தருளியமை வரலாற்றின் அடிப்படையிலும் சமயஞ் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும் ஆராயத்தக்கதாகும்.
|
|
திரு ஊரகம் ஊரகத்தான் கோவில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலின் கருவறை விமானம் ஸார ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பாகும். திருஊரகம் பெருமாள் கோயிலுக்குள்ளேயே நீரகம், பேரகம், கார்வானம் ஆகிய திவ்ய தேசங்கள் அமைந்திருக்கின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் நான்கு ராஜவீதிகட்கு மத்தியில் அமைந்துள்ளது இத்தலம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Jul 2017 |
| பார்வைகள் | 34 |
| பிடித்தவை | 0 |