வழிபாட்டுத் தலம்
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வடபழநி முருகன் |
| ஊர் | வடபழனி |
| வட்டம் | வடபழனி |
| மாவட்டம் | சென்னை |
| தொலைபேசி | 044-24836903, 044-24802330 |
| உட்பிரிவு | 4 |
| மூலவர் பெயர் | வடபழனி ஆண்டவர் - முருகன் |
| தாயார் / அம்மன் பெயர் | ஸ்ரீவள்ளி, தேவசேனா |
| தலமரம் | அத்தி |
| திருக்குளம் / ஆறு | திருக்குளம் |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | 1. பள்ளியறை - காலை 5.30 மணி 2. கால சந்தி - காலை 6.30 மணி 3. உச்சிக் காலம் - பகல் 12.00 மணி 4. சாயரட்சை - மாலை 5.00 மணி 5. அர்த்த ஜாம பூஜை - இரவு 9.00 மணி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 09.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். |
| திருவிழாக்கள் | சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள். |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் கி.பி.1997-ஆம் ஆண்டைச் சேர்ந்த நவீன காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. ஸ்ரீஸ்ரீஅண்ணாசாமித்தம்பிரான் (முதல் சித்தர்), ஸ்ரீஸ்ரீ இரத்தினசாமித் தம்பிரான் (இரண்டாம் சித்தர்), ஸ்ரீஸ்ரீ பாக்கியலிங்கத்தம்பிரான் (மூன்றாம் சித்தர்) இம்முப்பெரும் சித்தர்களின் பிருந்தாவன ஆலயத்தை முற்றிலும் புதிதாக நிர்மாணம் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மற்றொரு நவீன காலக் கல்வெட்டு ஒன்று வடபழநி ஆண்டவர் திருவடிப்பெருமை என்னும் இறைப்போற்றி பாடல் ஒன்று உள்ளது. இக்கோயில் மகாமண்டபம் சென்னையைச் சேர்ந்த சாண்டோ.எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் என்பவரால் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு உள்ளது. 14.06.1951-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு திருச்சுற்று (பிரகாரம்) பணிக்கு கைங்கர்யம் செய்தவர்களின் பெயர் பட்டியலையும், தொகையினையும் கொண்டுள்ளது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருக்கோயில்கள் மேம்பட்டுத் திட்டம்1984 ஆகஸ்டு 15-ஆம் நாளில் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில் உபரி நிதியில் இருந்து ரூ.9,43,000.31 வழங்கப்பட்டுள்ளமையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. |
| சுவரோவியங்கள் | இக்கோயிலில் உத்தரத்திற்கு கீழே வரையப்பட்டுள்ள தற்கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. முருகனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பு உள்ளிட்ட திருவிளையாடல்களும், முருகனின் அறுபடை வீடுகளான திருத்தலங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. |
| சிற்பங்கள் | கருவறையைச் சுற்றி கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய இறைத்திருவுருவங்கள் காணப்படுகின்றன. மேலும் சூரியன், சண்டிகேசுவரர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வையாபுரி பாண்டியன் முதலிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் கருவறையின் வடசுற்றில் கணபதி, காசிவிசுவநாதர், காசி விசாலாட்சி, வள்ளி, தேவசேனா உடனுறை சண்முகர், வீரபத்திரர், மஹாகாளி, வீரபாகு, பைரவர், கடம்பன், முத்துக்குமாரசுவாமி ஆகிய சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. நடராசர், மாணிக்கவாசகர், சிவகாமி, சிவன், நிருத்தகணபதி, காளி, சுப்பிரமணியர், வள்ளி, தேவசேனை, பழநியாண்டவர் ஆகிய செப்புத் திருமேனிகளும் இக்கோயில் உலாப்படிமங்களாக வழிபாட்டில் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 100 ஆண்டு பழமையானது. |
|
சுருக்கம்
திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மைவாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் எழுந்தளியிருப்பவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர். அருள்மிகு வடபழநி ஆண்டவர் சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலையிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100 அடி தொலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். சென்னையிலுள்ள பழமையான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார். தலபுராணக்கதைகளின்படி நாயக்கர் ஒரு நாள் பூஜை செய்துகொண்டிருக்கும்போது அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்திலிருந்து பெற்றதை அவர் அறிந்துகொண்டார். இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர் தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான். பாக்யலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.கோயிலுக்கென்று பிரத்யேக தீர்த்தக்குளத்துடனும் பெரிய வளாகத்தை கொண்டதாகவும் வடபழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீருக்கு பிணிதீர்க்கும் குணம் உள்ளதாக ஐதீக நம்பிக்கை உள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன. பழநிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு தங்களின் நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வழிபடுகின்றனர். இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள் பாலிப்பது சிறப்பு.
|
|
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலின் தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களில் சிவன் மற்றும் முருகனின் வடிவங்கள் சுதைச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. கிழக்கில் அமைந்துள்ளது இராஜகோபுரமாகும். இராஜகோபுரம் 112 அடி உயரமுடையது. இராஜகோபுரத்தினையடுத்து பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், வாகன மண்டபம், உற்சவர் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன இக்கோயில்களின் கட்டிட அமைப்புகளாக உள்ளன. இக்கோயிலில் கருவறை சதுரவடிவில் உள்ளது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் உள்ளன. நுழைவாயிலின் மேற்புறம் யானைத்திருமகள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், சண்டிகேசுவரர், துர்க்கை, வீரபாகு, வீரபத்திரர், பைரவர், காளி, வையாபுரி பாண்டியன், தேவார மூவர், மாணிக்கவாசகர் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. மேலும் நடராசர், முருகன், வள்ளி, தேவசேனை, சிவகாமி, விநாயகர் ஆகிய செப்புத்திருமேனிகள் விழாக்காலங்களில் உலாப்படிமங்களாக வழிபடப்படுகின்றன. திருச்சுற்றில் அங்காரகன் (செவ்வாய்), சண்முகர், மீனாட்சி ஆகிய தெய்வங்களின் சிற்றாலயங்கள் வடக்குப்பக்கத்திலும், அருணகிரிநாதர் மற்றும் அனுமனின் சிறுகோயில்கள் கிழக்குப்பக்கத்திலும் அமைந்துள்ளன. இராஜகோபுரத்தின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. தலமரமான அத்திமரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளம் ஆறுஅங்கங்களான உபானம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை முதலிய உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. சுவர்ப்பகுதியில் வேதிகை உறுப்பு காணப்படுகிறது. மேலும் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதி கோட்டங்களைப் பெற்று விளங்குகிறது. இக்கோட்டங்களில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வடபுறம் துர்க்கை ஆகிய இறைவடிவங்கள் இடம்பெற்றுள்ளன. வாகன மண்டபத்தில் மயில், பூதம் ஆகிய வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றில் வடபுறம் உள்ள திருமண மண்டபத்தில் மேடை போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இங்கு திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. திருச்சுற்று முழுவதும் முழுத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் முன்புறம் அடியவர்கள் நின்று வணங்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் மேற்கூரையின் விதானப்பகுதியில் முருகனின் பிறப்பு முதலான திருவிளையாடல்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அருள்மிகு வேம்புலிங்கேசுவரர் திருக்கோயில், கோயம்பேடு குறுங்காலீசுவரர் திருக்கோயில், அமைந்தகரை பெருமாள் கோயில், அமைந்தகரை சிவன் கோயில் |
| செல்லும் வழி | அருள்மிகு வடபழநி ஆண்டவர் சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலையிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100 அடி தொலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 - பகல் 12.30 மணி மாலை 4.00 மணி -இரவு 9.00 மணி வரை |
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | கோயம்பேடு, அரும்பாக்கம், அசோக்பில்லா், வடபழனி |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | சென்னை மத்திய இரயில் நிலையம், எழும்பூர், வடபழனி மின்சார தொடர்வண்டி |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | சென்னை மாநகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 26 May 2017 |
| பார்வைகள் | 124 |
| பிடித்தவை | 0 |