வழிபாட்டுத் தலம்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வெண்ணெய்நல்லூர் அருட்டுறை, தடுத்தாட் கொண்டார் கோயில் |
| ஊர் | திருவெண்ணெய்நல்லூர் |
| வட்டம் | திருக்கோயிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர், தடுத்தாட்கொண்ட நாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | மங்களாம்பிகை, வேற்கண்ணியம்மை |
| தலமரம் | மூங்கில் |
| திருக்குளம் / ஆறு | தண்டதீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | பங்குனி உத்திரம், ஆடி சுவாதி, ஆடி சுவாமி உற்சவத்தில் திருமண உற்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராச, கோப்பரகேசரி பன்மரான இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராச, மூன்றாங் குலோத்துங்க, மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திர இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி, விஜயமகாராயர், விரூபாட்சுமகாராய, குமாரமல்லி கார்ச்சுனராய, கிருஷ்ணதேவராய இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவ மகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராசன் காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது. திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் கல்வெட்டில் கே்ஷத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் `தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது. `பூமருவிய திசைமுகத் தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றார். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் உள்ளன. இக்கல்வெட்டு காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி. ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இவ்வூரில் இராஜராஜப்பேரேரி ஒன்று உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும். இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின் மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால் கட்டப் பட்டதாகும். இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின் புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற கல்வெட்டுத் தொடர் உறுதிப் படுத்துகின்றது. (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி) அக்கல்வெட்டு பின்வருமாறு: `ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான் உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No.231). இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268 மார்ச்சு 28 ஆம் தேதியாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில நிவந்தம். நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார், திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில் களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக் கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர்கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார் அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும், திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திரு வெண்ணெய் நல்லூரில் வானவன்வதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம் ஒன்றே அரைமா அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள். (மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்) அருட்டுறை உடைய மகாதேவர் கோயில் தேவரடியாரில் அறமுடையார்மகன் திருமலை அழகியானான வீரகள், வீரப் பல்லவரைய உடையான் அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி, தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன் தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது தன்னுடைய இந்தநிலத்தை இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி, கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும், திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில் ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக் கொடுத்துள்ளான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது. அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல் விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால் பழுதுபார்க்கப்பட்டது, விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவராயர் தம்பேரால் தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள் திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராயர்சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார். `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன் திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இதற்கு இதுவரை Priest என்றே பொருள் கொள்ளப் பட்டது. ஆனால் இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட ``ஆட்கொண்டதேவர் கோயிற் பூசையும் சைவா சாரியரும் பண்டு செய்து வருகிற சிவப்பிராமணரையும், சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களையும் தவிர``, என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப் பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது. இக் கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்.கல்வெட்டில் இறைவன் பெயர் ‘திருவருட்டுறை ஆழ்வார்’, ‘திருவெண்ணெய்நல்லூர் உடையார்’, ‘தடுத்தாட்கொண்ட தேவர்’ என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளது. ‘பித்தா பிறை சூடீ’ பதிகம் ஸ்ரீ காசி மடத்தின் திருப்பணியாகக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. |
| சிற்பங்கள் | கல்மண்டபத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் வரிசையாகவுள்ளன. நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கவாயில் வழியாக உட்சென்றால் மூலவர் சந்நிதி. எதிரில் சாளரம் உள்ளது. மூலவர் அழகான சிவலிங்கத் திருமேனி. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. விசாலமான உட்பரப்பு. விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், கஜலட்சுமி சந்நிதி, மறுகோடியில் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நவக்கிரகங்கள் உரிய அமைப்பிலும் உரிய வாகனங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. அம்பாள் கோயில் இடப்பால் உள்ளது. நின்ற திருக்கோலம். பள்ளியறை உள்ளது. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார பாடல் பெற்ற தலம். சுந்தரரை தடுத்தாட்கொண்ட திருத்தலம். |
|
சுருக்கம்
சுந்தரரின் அருள் வாழ்விற்கு இடமான தலம். வழக்கிட்டு, ஆரூரரை வலியவந்து ஆட்கொண்ட தலம் ; நின் ‘வருமுறைமனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக’ என்று கேட்டவர்க்கு ‘என் இருப்பிடம் இதுவே’ என்று இறைவன் காட்டிய திருக்கோயிலை உடைய பதி. ‘அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான்’ என்றும், ‘தரும தேவதை’ என்றும் புகழப்பெற்ற சடையப்ப வள்ளலின் பதி. சைவ சித்தாந்த சாத்திரங்களுள் தலையானதாகத் திகழும் சிவஞானபோதம் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் (மெய்கண்டதேவர்) வாழ்ந்து உபதேசம் பெற்ற சிறப்புத் தலமும் இதுவே. முதிய வேதியராய் வந்து இறைவன் சுந்தரரைத் தடுத்தாண்ட இடம் - தடுத்தாவூர் என்று வழங்குகிறது. இவ்விடம் திருநாவலூரிலிருந்து, திருவெண்ணெய் நல்லூருக்குப் போகும் வழியில் சிறிய கிராமமாகவுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தின் மூலம் இக்கோயிலின் சுவாமி, அம்பாள் விமானங்களும் மக்களின் பேராதரவால் ஏனைய திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் உள்ள தலங்கள் திருமுண்டீச்சுரமும், திருநாவலூரும் ஆகும். பங்குனி உத்திரம், ஆடி சுவாதி முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி சுவாமி உற்சவத்தில் திருமண உற்சவம், திருமணத்தைத் தடுத்தது, சுந்தரருக்குக் காட்சி கொடுத்தது முதலிய ஐதீகங்கள் நடைபெறுகின்றன. சுந்தரர் உற்சவத் திருமேனி கண்டு தொழத் தக்கது. மெய்கண்டாரின் சமாதி, வடக்கு வீதியின் கோடியில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த இம்மடாலயத்தில் (மெய்கண்ட தேசிகர் மடத்தில்) மேற்படி ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் ஒருவர் இருக்கின்றார். இம்மடத்தின்மூலம் கோயிலில் நாடொறும் காலசந்திக் கட்டளை நடைபெறுகிறது. கோயிற் பெருவிழாவில் எட்டாந் திருவிழாவன்று திருவாவடுதுறை ஆதீன மடத்தின் மூலம் மண்டகப்படி நடைபெறுகிறது. இதுதவிர, ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நூற்றுக்கணக்கானோருக்கு ஆதீனத்தின் மூலம் அன்னதானம் செய்யப்படுகிறது. சடையப்ப வள்ளலின் இல்லம் வடக்கு வீதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
|
|
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோபுரம் கடந்து உள்நுழைந்ததும் சுந்தரர் வழக்கு நடந்த, ‘வழக்கு தீர்த்த மண்டபம்’ வழக்கு வென்ற அம்பலம் உள்ளது. இம்மண்டபம் கிலமாகியுள்ளது. அடுத்து, செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னர் கொடிமர விநாயகர், பலிபீடம் உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். கல்மண்டபத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் வரிசையாகவுள்ளன. நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கவாயில் வழியாக உட்சென்றால் மூலவர் சந்நிதி. எதிரில் சாளரம் உள்ளது. மூலவர் அழகான சிவலிங்கத் திருமேனி. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. விசாலமான உட்பரப்பு. விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், கஜலட்சுமி சந்நிதி, மறுகோடியில் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நவக்கிரகங்கள் உரிய அமைப்பிலும் உரிய வாகனங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமுண்டீச்சுரம், திருநாவலூர் |
| செல்லும் வழி | பண்ருட்டி - அரசூர் சாலையில் உள்ள தலம். விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் சென்று High-ways Inspection Bungalow வை அடுத்து வலப்புறமாகச் செல்லும் திருக்கோயிலூர் பாதையில் சென்று திருவெண்ணெய் நல்லூர்ரோடு தொடர்வண்டி லெவல் கிராசிங்கைத் தாண்டிச் சென்றால் (5 கி.மீ) ஊரையடையலாம். (ஊருக்குள் இடப்புறமாகச் செல்லும் சாலையில் போய்க் கோயிலையடையலாம்.) |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருவெண்ணெய்நல்லூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | திருவெண்ணெய்நல்லூர் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 25 Sep 2017 |
| பார்வைகள் | 121 |
| பிடித்தவை | 0 |