வழிபாட்டுத் தலம்
கீழையூர் இரட்டைக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கீழையூர் இரட்டைக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அவனிகந்தர்ப்ப ஈஸ்வரர் கோயில் |
| ஊர் | கீழையூர் |
| வட்டம் | அரியலூர் |
| மாவட்டம் | அரியலூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | அகஸ்தீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / பழுவேட்டரையர்கள், முதலாம் ஆதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | முதலாம் பராந்த சோழனின் 12-வது ஆட்சியாண்டு கல்வெட்டொன்று பழுவேட்டரையர் கண்டன் அமுதனார் சோழர்களுக்காக பாண்டியருக்கு எதிராக போரிட்டு வென்றார் என்ற செய்தியை குறிப்பிடுகிறது. மறவன் கண்டன் என்பவனால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இளங்கேசன் என்பவனால் புனரமைக்கப்பட்டு குலோத்துங்க சோழீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. அம்பலவன் பழுவூர் நக்கன் என்னும் சிவத்தொண்டன் உத்தமசோழன், முதலாம் இராஜராஜசோழன் ஆகியோர் காலத்தில் குறிப்பிடப்படுகின்றான். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயில் தேவகோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. தென்முகக்கடவுள், முருகன், நான்முகன், வீணையை மீட்டும் தென்முகக் கடவுள் (வீணாதர தட்சிணாமூர்த்தி) ஆகிய சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
இரட்டைக் கோயில் “அவனிகந்தர்ப்ப ஈஸ்வரர் கோயில்“ என்றும், “அவனி கந்தர்ப்ப ஈஸ்வர கிருஹம்“ என்றும் அழைக்கப்படுகிறது. இருகோயில்கள் அடுத்தடுத்து ஒற்றை மதிலை அரணாகக் கொண்டு உள்ளன. இப்பெயர்கள் அங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகின்றன. இக்கோயிலின் பெயர்களும் தற்பொழுது முறையே “தென்வாயில் சிறுகோயில்“(அகஸ்தீஸ்வரர் கோயில்) என்றும், “வடவாயில் சிறு கோயில் (அருணாச்சலேஸ்வரர் கோயில்) என்றும் அழைக்கப்பெறுகின்றன. வடவாயில் சிறுகோயிலில் உள்ள தேவகோட்டத்தில் அண்ணாமலையார் உள்ளதால் இக்கோயில் அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இக்கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். அதாவது முதலாம் ஆதித்தன் காலத்தைச் சார்ந்தவையாகும். இக்கோயிலில் மேற்கு நோக்கிய நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு துவாரபாலகர் சிலைகள் கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அகஸ்தீஸ்வரர் கோயிலின் வடக்குப் பக்கத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இக்கோயிலின் அர்த்தமண்டபத்திற்கு முன் இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டங்களில் நான்முகன், தென்முகக்கடவுள், முருகன் ஆகிய சிற்பங்கள் சோழர்கால சிற்பத்திறனைக் காட்டுகின்றன. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள இறைவனை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். ஆலந்துறையப்பர் என்று இறைவன் தேவாரப் பாடலில் குறிக்கப்படுகிறார்.
|
|
கீழையூர் இரட்டைக் கோயில்
| கோயிலின் அமைப்பு | ஒரே வளாகத்தில் இரட்டைக் கோயில்கள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்த மண்டபம் பெற்றுள்ள இக்கோயில் பழுவேட்டரையர்களின் கோயிலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். முற்காலச் சோழர்கள் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. கருவறை தேவகோட்டங்களில் தென்முகக்கடவுள், முருகன், நான்முகன் ஆகியோர் அமைக்கப்பட்டுள்ளனர். இரு தளக் கற்றளியாக வேசரபாணியில் ஒரு கோயிலும், நாகரபாணியில் ஒரு கோயிலுமாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரர் கோயில் என்றும், அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றும் தற்போது அழைக்கப்பட்டு வரும் இக்கோயில்கள் தென்வாயில் சிறுகோயில் (அகஸ்தீஸ்வரம்), வடவாயில் சிறுகோயில் (அருணாச்சலேஸ்வரம்) என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கோவிந்தபுதூர் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அரியலூர் வட்டத்தில் கீழையூரில் இரட்டைக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 71 |
| பிடித்தவை | 0 |