வழிபாட்டுத் தலம்
திருவெண்காடு சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவெண்காடு சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வெண்காட்டீசர் கோயில், வெண்காட்டு நாதர், சுவேதாரண்யேஸ்வரர் கோயில் |
| ஊர் | திருவெண்காடு |
| வட்டம் | சீர்காழி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | பிரமவித்யாநாயகி |
| தலமரம் | வடஆலமரம் |
| திருக்குளம் / ஆறு | முக்குளம் - அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
| ஆகமம் | காமிகாகமம், மகுடாகமம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | மாசிமகப் பெருவிழா |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| கல்வெட்டு / செப்பேடு | உட்புறச் சுவரில் தலப்பதிகக் கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | அம்பாள் சந்நிதிக்குள் வலப்பால் பள்ளியறை. நேரே அம்பாள் தரிசனம். உள்பிரகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்பாள் என்ற பெயரில் நின்ற திருமேனியொன்றும் சுக்கிரவார அம்மன் சந்நிதியும் உள்ளன. சந்திரதீர்த்தத்தின் கரையில் வடால (வட ஆல) மரமுள்ளது. மிகப் பெரிய மரமாகத் தழைத்து விளங்குகிறது. ஆங்காங்கே விழுதுகள்ஊன்றி அவை அவை தனித்தனி மரமாகக் கிளைத்து விசாலமாகத் தழைத்துள்ளது. மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வெளிவலம் முடித்து, கொடிமரம் தொழுது உட்சென்றால் வலப்பால் உற்சவ மண்டபம் உள்ளது. பக்கத்தில் அலுவலகம். வாயில் முகப்பில் மேலே வண்ணச் சுதையில் திருக்கல்யாணக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் தரிசனம். அறுபத்து மூவர் மூல உற்சவத் திருமேனிகள் இருவரிசைகளில் முன் பின்னாக அழகுறக் காட்சி தருகின்றன. (மூலத் திருமேனிகள் பின் வரிசையாகவும் உற்சவத் திருமேனிகள் முன் வரிசையாகவும் இரு வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.) அடுத்துப் பத்திரகாளி சந்நிதி உள்ளது. (அகோரமூர்த்தி உள்ள தலமாதலின் இங்குப் பத்திரகாளி சந்நிதி உள்ளது.) அதை அடுத்து வீரபத்திரர், இடும்பன், சுகாசனமூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் முதலிய திருமேனிகள் ஒரு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கஜலட்சுமி தரிசனத்தையடுத்து இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக, உண்மையிலேயே அகோரராக - அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
திருவெண்காடு கோயில் சிவவடிவங்களுள் ஒன்றான அகோர மூர்த்தி வடிவத்தை வழிபடும் தலமாக அமைகின்றது. மூல அகோர மூர்த்தியின் பக்கத்தில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி தருகின்றார். அற்புதமான வேலைப்பாடு. காணக்காணத் தெவிட்டவில்லை. திருவடியில் ஒருபுறம் மருத்துவன் இழிந்து தலை சாய்த்து விழும் அமைப்பும் மறுபுறம் நந்தியும் உள்ளது காணத்தக்கது. இவ்அகோர மூர்த்திக்கு இக்கோயிற் பெருவிழாவில் ஐந்தாம் நாள் அன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்கிறது. இப்புறப்பாட்டின் போது (மாசிப்பூர அபிஷேகத்தின் போது) இம்மூர்த்திக்குச் செய்யப்படும் சிறப்புக்கள் பலப்பல. ஆயிரம் புட்டிகள் பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது அடிக்கொரு பட்டு சார்த்தும் சிறப்பு முதலியனவாக எண்ணற்ற சிறப்புக்கள். நடராச சபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்குத் தில்லையைப்போல் நாடொறும் பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரஹஸ்யமும் உள்ளது.
|
|
திருவெண்காடு சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்கினி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரிய தீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. முகப்பில் ‘புதன்’ சந்நிதியும் எதிரில் அடுத்த தான ‘சந்திர’ தீர்த்தமும் உள்ளது. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை வலம் வந்து வழிபட்ட பின்னரே இங்கு தரிசனம் பூர்த்தியாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முன் இல்லாத வில்வ மரம் உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சீர்காழி விடங்கேசுவரர் கோயில், திருக்காட்டுப்பள்ளி, ஆரண்யேஸ்வரர் கோயில், திருக்குருகாவூர் வெள்ளடை நாதர் கோயில், திருவெண்காடு அய்யனார் கோயில் |
| செல்லும் வழி | மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதியுள்ளது. மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 42 |
| பிடித்தவை | 0 |