Back
வழிபாட்டுத் தலம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம்
ஊர் திருவதிகை
வட்டம் பண்ருட்டி
மாவட்டம் கடலூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்
தாயார் / அம்மன் பெயர் திரிபுரசுந்தரி
தலமரம் சரக்கொன்றை
திருக்குளம் / ஆறு கெடிலநதி
வழிபாடு ஆறு கால பூசை
திருவிழாக்கள் வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெரு விழாவும், சித்திரைச் சதயத்தில் பத்து நாள்களுக்கு அப்பர் சுவாமி திருவிழாவும் நடைபெறுகின்றன.
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-9-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர்
கல்வெட்டு / செப்பேடு அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப், பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.
சிற்பங்கள் அதிகை - வீரட்டானம் அரிய சிற்பங்களைக்கொண்ட, கலைப் பெட்டகமாகத் திகழ்கின்றது. கருவறையைச் சுற்றிலும் குடைவரைச் சிற்பங்கள் - சற்று வளர்த்திச் செய்யப்பட்டு உள்ளன. இச்சிற்பங்களுள் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர், சரபமூர்த்தி, கல்யாணசுந்தரர், ஏகபாதர் முதலியன பேரழகு வாய்ந்தவை. அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி வலப்பால் தனிக்கோயிலாகவுள்ளது. அழகிய திருமேனி - நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள் - எதிரில் நந்தியுள்ளது. உள் மண்டபத்தை அடைந்ததும் நேரே மூலவர் சந்நிதி. மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கிழக்கு நோக்கியது. பெரிய திருமேனி - பெரிய ஆவுடையார். சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பின்னால் சுவாமி அம்பாள் உருவங்கள் சோமாஸ்கந்த வடிவில் புடைமூர்த்தமாகச் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன - கல்யாண திருக்கோலம். இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பிட்சாடனர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, அஸ்திரதேவர், திலகவதியார், நால்வர் ; சண்டேசுவரர் முதலிய உற்சவத் திருமேனிகள் தரிசிக்கத் தக்கவை. உள்கோபுரம் தாண்டினால், உயரமான நந்தி உள்ளது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். வலமாக வரும்போது அப்பர் சந்நிதி (உற்சவமூர்த்தி) உள்ளது. சேக்கிழார் முதலாக அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் உள்ளன. அடுத்துத் தலமரம் சரக்கொன்றை உள்ளது. பக்கத்தில் திலகவதியார் சந்நிதி. அடுத்து சனீஸ்வரர், அம்பாள திருமேனிகள் உள. முன்னால் பெரிய சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அடுத்து அப்பர் சந்நிதி. மூலமூர்த்தம் உள்ளது. அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன. வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் கஜசம்ஹாரகோலம். வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன. மிதித்தேறும் படியின் இருபுறத்திலும் அழகான நடன மாதரின் உருவங்கள். கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில்வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அப்பர் பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
நடுநாட்டுத் தலம். சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய ‘மனவாசகங்கடந்தாரின்’ அவதாரத் தலம் இதுவே. இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் ; பல்லவனான மகேந்திர வர்மனின் மனதை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் ; இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம். தென்கங்கை எனப்படும் கெடிலநதி பக்கத்தில் ஓடுகின்றது. நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன. கோயிலில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் கட்டளையாக ‘சிவ சிவ ஒலி மண்டபம்’ 1962-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி, 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்தவடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர்.) இப்பகுதி இப்போது கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - “ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்” என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரிய ரோடுக் கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காட்சி தருகின்றது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய ஆங்கிலேயர் காலத்தில் போர்க் கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு மிகப் பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாத படிக் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் கருங்கல் தூண்கள் மொட்டையாக நின்று கொண்டிருக்கும் நிலையில் திலகவதியார் மடம் காட்சியளிக்கிறது. பதினாறுகால் மண்டபத்தின் பக்கத்தில் அப்பர் சுவாமிமடம் - திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது உள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். ஏழுநிலைகளையுடையது. உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தின் இடப்பால் ‘சக்கரதீர்த்தம்’ எனப்படும் திருக்குளம் உள்ளது. இம்மண்டபத்தில் புகும்போது முதலில் உள்ள இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளன. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்கின்றனர். இவர் சீடரான சிவஞானத் தம்பிரான் தான் முதன் முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாட்கள் விழா எடுத்துச் சிறப்பாக நடத்தினார் என்பர். உள்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம் கொடிமரத்து விநாயகர் தரிசனம், முன்னால் நந்தி. வலப்பால் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதைத் தேவசபை என்கின்றனர். நடராச அபிஷேகம் இம்மண்டபத்தில் நடைபெறும். முன் மண்டபம், எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. பிரகாரத்தில் அடுத்து விநாயகர் சந்நிதியும் பக்கத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்) உள்ளன. வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. பக்க வாயிற்படிகள் வழியே சென்று, முன் மண்டபத்தையடைந்து, துவாரபாலகரை வணங்குகிறோம். திரிபுராந்தகர் உற்சவ சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. சுவாமி கருவறை, பூமியில் நிழல் சாயாதபடி கட்டப்பட்டுள்ள தேர்போன்ற அமைப்பு. (காஞ்சி கயிலாய நாதர் கோயில் அமைப்பை நினைவூட்டுகிறது) கருவறை சுதையாலான பணி. இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சாரநாராயணப் பெருமாள் கோயில், ஸ்ரீரங்கநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில்
செல்லும் வழி கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பாதையில் சென்றால் திருவதிகையை அடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும். பண்ருட்டி இருப்புப்பாதை நிலையம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவதிகை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி பண்ருட்டி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Dec 2018
பார்வைகள் 57
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்