Back
வழிபாட்டுத் தலம்
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
வேறு பெயர்கள் முல்லைவனம்
ஊர் திருமுல்லைவாயில்
வட்டம் திருமுல்லைவாயில்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் லதாமத்யாம்பாள், கொடையிடை நாயகி, கொடியிடையம்மை
தலமரம் முல்லை
திருக்குளம் / ஆறு கல்யாண தீர்த்தம்
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் மாசி தெப்பத்திருவிழா, ஆனி வசந்த உற்சவம், வைகாசி விசாகத்தில் பத்து நாட்கள் பெருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இராஜகோபுரத்தில் துவார பாலகர்கள் உள்ளனர். நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் தரிசனம். அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் – யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம், தன் கழுத்தை அரிவது, காட்சி தருவது, சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் (பிற்காலப் பிரதிஷ்டையான) ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. உள்சுற்றில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள. அறுபத்துமூவர் உருவங்களுள் ஒருசிலவே வைக்கப்பட்டுள்ளன. பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக க்ஷிப்ர கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நடராச சபைக்குப் பக்கத்தில், தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார். தொண்டைமானுக்கு அவசரத்தில் காட்சி தந்ததால் அம்பாள் சந்நிதி வலப்புறமாக உள்ளதாம். கிழக்கு நோக்கியது. அம்பாள் சந்நிதியை வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. முகப்பில் துவார பாலகியரும் உளர்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் சென்னைக்கு அருகில் உள்ளது. சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் எனப்படுகிறது. இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய ‘பச்சையம்மன் கோயிலும்’ உள்ளன. சென்னை பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும் ; வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும் மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகின்றது. இன்றும் பலர் இவ்வழக்கத்தைக் கைக்கொண்டு தரிசித்து வருகின்றனர். இராமலிங்க வள்ளலாரின் அருட்பாவிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் “அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன. அற்புதமான நெஞ்சுருக்கும் பதிகம்.
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் தெற்கு நோக்கியது. பக்கத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தால் புழலேரி தெரிகின்றது. ராஜகோபுரத்திற்கு எதிரில் சந்நிதி வீதியில் பதினாறுகால் மண்டபமும் பக்கத்தில் வசந்த மண்டபமும் உள்ளன. வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. விசாலமான வெளிப்பிராகாரம், வில்வமரம் உள்ளது. பைரவர் சந்நிதி உள்ளது. செப்புக் கவசமிட்ட கொடி மரம். நந்தி (தொண்டைமானுக்குதவும் நிலையில்) கிழக்கு நோக்கி உள்ளது. உள் நுழைந்தால் இடப்பால் சூரியன் திருவுருவம். மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது ; அற்புதமான சுயம்பு மூர்த்தி, உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார், மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும், ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான், வருடத்திற்கொருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப் படுகின்றது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமி மீதிருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேகக் காலங்களில் மேன்மேலும் சந்தனம் சார்த்தப்படும். ஆனால் களைவதில்லை. களைந்து சார்த்துவது மேற்குறித்த ஒருநாளில் மட்டுமே. இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக்காப்பு இருந்து கொண்டேயிருக்கும். மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. பூண்கள் இடப்பட்டுள்ளன. சுவாமி விமானம் கஜப்பிருஷ்ட அமைப்புடையது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பச்சையம்மன் கோயில், வேளச்சேரி தண்டீசுவரர் கோயில், திருவலிதாயம் (பாடி) சிவன் கோயில்
செல்லும் வழி சென்னையில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சென்னை – ஆவடி சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. பூந்தமல்லியில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் , ஆவடியை அடுத்து திருமுல்லைவாயில் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருமுல்லைவாயில்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருமுல்லைவாயில்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Nov 2018
பார்வைகள் 25
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்