சிற்பம்

பிட்சாடனர்

பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் பிட்சாடனர்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
வட்டணை படவந்த நாயகர் நக்கன் பெருமான்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
உலகியல் நெறிமுறைகளான பிரவிருத்தி மார்க்கத்தினைப் பின்பற்றாமலிருந்ததைச் சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் ரிஷிகளுக்கு உணர்த்திய சிற்ப வடிவாகும். இப்புராணப் பின்னணியை லிங்க புராணம் விளக்குகின்றது. பிட்சாடனர் சிற்பம் சோழர்காலத்தில் புகழ்பெற்ற சிற்பமாகும். தஞ்சைப் பெரிய கோயிலில் கற்சிற்பமாகவும், உலோகச் சிற்பமாகவும், அதற்குரிய அணிகலன்களைப் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுக்களில் குறிப்புகள் இருக்கின்றன. கல்வெட்டு இவரைப் “பிச்சதேவர்” என்று குறிப்பிடுகிறது. சோழர்காலச் சிவாலயங்களில் தேவகோட்டங்களில் இடம்பெற்றதுடன் உற்சவமூர்த்தியாகவும் போற்றப்பட்டார். சோழர் கோயில்களில் திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனியராக விளங்குகிறார். தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள பிட்சாடனர் ஜடாபாரம் தலையணியாய் கொண்டு, கங்கையையும், பிறையையும் தரித்துள்ளார்.நெற்றியில் முக்கண் விளங்க, முன்னிரு கைகளில் வலது கை மானுக்கு உணவூட்டுகிறது. இடது முன் கை பிச்சைக் கலனை ஏந்தியுள்ளது. வலது பின் கையில் உடுக்கையை ஏற்றவாறும், இடது பின் கையில் நீண்ட தண்டத்துடன் கூடிய மயிற்பீலிகையை பிடித்து தோளுக்கு பின்னால் சாத்தியவாறும் உள்ளார். பிச்சதேவரின் காலின் இருபுறமும் மானும், பாத்திரத்தை தலையில் தாங்கியுள்ள கணமும் உள்ளன. காலில் செருப்பு அணிந்துள்ள பிச்சமூர்த்தி வைஷ்ணவ நிலையில் காட்டப்பட்டுள்ளார். நாகத்தினை இடைக்கச்சாக கொண்டு, திகம்பரராய் திக்குகளையே ஆடையாகக் கொண்டு நக்கன் நடக்கிறார். கைகளில் தோள் வளை நாகவளையாகவும், முன்வளைகளும் அணிந்துள்ளார். கழுத்தணிகளாக கண்டிகை, நீண்ட ஆரம் காணப்படுகின்றன. மார்பில் பட்டையான முப்புரி நூல் அணிந்துள்ளார். தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த பிட்சாடனர் படிம் முற்காலச் சோழர் கலைப்பாணியில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிச்ச பெருமானின் வலதுபுறம் உள்ள பகுப்பில் மூன்று கணங்கள் தங்கள் தலைவரின் தோற்றம், செயல் கண்டு பாடி இசைக்கின்றன. பிச்ச பெருமானின் இடதுபுறம் உள்ள பகுப்பில் திருமால் மோகினியாக நின்றுள்ளார். அருகில் பெண் பூத கணம் ஒன்று நிற்கிறது.
குறிப்புதவிகள்
பிட்சாடனர்
சிற்பம்

பிட்சாடனர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்