வரலாற்றுச் சின்னம்
திருக்கோகர்ணம் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | திருக்கோகர்ணம் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | திருக்கோகர்ணம் |
| ஊர் | திருக்கோகர்ணம் |
| வட்டம் | திருக்கோகர்ணம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
திருக்கோகர்ணம் குடைவரையின் முகப்பில் கீழும் மேலும் சதுரங்களையும் இவற்றை இணைக்கும் எண்பட்டை அமைப்பையும் கொண்டு விளங்கும் இரண்டு தூண்கள் அணி செய்கின்றன. இதற்கு நேராகப் பக்கச் சுவர்களை ஒட்டி அரைத்தூண்கள் இதே அமைப்பில் குடையப்பட்டுள்ளன. இவற்றின் நடுவில் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகைகள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபப் பகுதியிலும் எவ்வித வேலைப்பாடும் அற்ற இரண்டு தூண்களும் பக்கங்களில் இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. இம்மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கோட்டத்தில் கங்கைவார் சடையரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் காட்சியளிக்கும் கங்காதரர் தனது மேலிரு கைகளில் அக்கமாலை பெற்றும் சடையைக் கோதியவாறு கடகமுத்திரை காட்டியும் கீழிரு கைகள் கடிமுத்திரை காட்டியும் காணப்படுகின்றார். இவரது மார்பில் முப்புரிநூல் செல்கிறது. வாகுவளையும், கங்கணங்களும், கண்டியும் பெற்று விளங்கும் இவரது தலையை சடைமகுடம் அணி செய்கின்றது. சங்கரனின் இடையை இறுக்கிய ஆடை அழகு செய்கின்றது. ஆடையினை இறுக்கும் துணி முடிச்சுகள் இருபக்கங்களிலும் தொங்கி இறைவனை மேலும் வனப்புடையதாக மாற்றியுள்ளது. கங்காதரரின் சடைமுடிக்கும் மேலே தனியாக கங்கையின் உருவம் அந்தரத்தில் தொங்கியவாறு காட்டப்பட்டுள்ளது. இவ்வம்மை, இறைவனைக் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறாள். கங்காதரர் தரைமட்டத்திலிருந்து நின்ற நிலையில் காணப்படுகின்றார். இக்குடைவரையில் காணப்படும் கங்காதரரின் சிற்பத்திற்கும் திருச்சிராப்பள்ளி மேல்குடைவரை கங்காதரரின் சிற்பத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருச்சியில் உள்ள புடைப்புச் சிற்பத்தில் இவ்விறைவனைச் சுற்றிப் பல சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன. மேலும் கங்கை சடையின் மேல் தாங்கப்பட்டுள்ளாள். இங்கு தனியாகக் காட்டப்பட்டுள்ளாள். இவ்வமைப்பிலிருந்து இக்குடைவரை காலத்தால் முற்பட்டதாக இருக்கலாம் தென்சுவரின் கோட்டத்தில் விநாயகரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. இவர் நான்கு கைகளுடன் விளங்குகிறார். பின்னிரு கைகளில் எழுத்தாணி மற்றும் ஒடிந்த தந்தம் பெற்றும் முன்னிரு கைகளில் இடக்கை தொடை மீதும் வலக்கை மோதகமும் பெற்று கிரீட மகுடத்துடன் அமர்ந்த நிலையில் விநாயகர் காட்சி தருகின்றார். மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் தாய்ப்பாறையிலேயே குடையப்பட்ட சதுர ஆவுடையாருடன் கூடிய இலிங்கத் திருமேனி காணப்படுகிறது. மூலவரான இவர் கல்வெட்டுகளில் "திருவேள்ப்பூர் ஸ்ரீ கோகர்ணத்து மகாதேவர்" எனப்படுகின்றார். குடைவரைக்கோயிலின் அருகிலேயே பாறையில் விநாயகர், வீரபத்திரருடன் கூடிய சப்த மாதர்களின் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத் தொகுதியின் உருவங்கள் சுகாசனத்தில் அமர்ந்துள்ளன. இக்குடைவரையில் மாறன் சடையனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்குடைவரையின் அமைப்பைக் கொண்டு இது பாண்டியர்களின் குடைவரைக் கலைப்பாணியைக் கொண்டது எனக் கருதலாம்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | கவின்நாட்டு கண்மாய் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரின் புறநகர்ப் பகுதியாக விளங்கி வரும் திருக்கோகர்ணம் குடைவரைக் கோயிலொன்றைப் பெற்றுள்ளது. இவ்வூரில் உள்ள குன்றின் தாழ்வான சரிவுப் பகுதியில் குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது. இக்குடை வரையை ஒட்டி பிற்காலத்தில் மண்டபங்கள், சிற்றாலயங்கள் நுழைவுக் கோபுரம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை முகப்பு, அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 60 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |