Back
வரலாற்றுச் சின்னம்
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
அமைவிடம் ஸ்ரீபாடாலாத்திரி நரசிங்கப் பெருமாள் கோயில்
ஊர் சிங்கப்பெருமாள் கோயில்
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் செங்கல்பட்டு
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரையின் முகப்புவாயில் தென்புறம் அமைந்துள்ளது. குடைவரைக்கோயில் பாறையின் கிழக்குப்புறத்தில் குடையப்பட்டுள்ளது. மிகவும் சிறியதான இக்குடைவரை மண்டபம் முன்புறம் இரு தூண்களைக் கொண்டுள்ளது. மற்ற குடைவரைகளைப்போலவே இதன் இருபக்கச்சுவர்களையொட்டி நடுவேயுள்ள தூண்களுக்கு நேராக அரைத்தூண்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் கீழும் மேலும் சதுரமாகவும் நடுவே எட்டுபட்டைகளுடனும் அமைந்துள்ளன. தூண்கள், அரைத்தூண்கள் ஆகியவற்றை உத்திரப்பகுதி ஒன்று இணைக்கிறது. மண்டபத்தின் உட்சுவரில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட கருவறை நீண்ட சதுரவடிவில் முன்புறம் இரண்டு படிகளுடன் அமைந்துள்ளது. வடக்குத்தூணின் மேற்புறம் உள்ள கல்வெட்டு முதலாம் இராஜராஜன் காலத்தியவை. இதேபோல் தெற்குத் தூணில் உள்ள கல்வெட்டு குறுக்குச்சுவர் ஒன்றால் மறைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் சன்னதிக்குப் பின்புறப் பாறையில் உள்ள கல்வெட்டொன்று முதலாம் இராஜராஜனுடையது. இக்கல்வெட்டில் இக்கோயிலை "நரசிங்க விண்ணகரம்" என்றும் இக்கோயில் இருக்கும் நாடு "செங்குன்ற நாடு" எனவும் இங்கு குடிகொண்டுள்ள இறைவன் "நரசிங்க விண்ணகரத் தேவர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயில் கருவறை வாயிலின் பக்கங்களில், வாயிற்காவலர் சிற்பம் ஏதும் காணப்படவில்லை. கருவறையினுள்ளே சுதைச் சிற்பமாக நான்கு கரங்களுடன் நரசிம்மரின் (திருமால்) உருவம் காணப்படுகின்றது. மூலவரின் வலக்கை சக்கரமும், இடக்கை சங்கும் ஏந்தியவாறு கீழ்வலக்கை அபயம் அளிப்பது போன்றும் மற்றொன்று கடி அஸ்தமாகவும் அமைந்துள்ளன. வலது கால் சற்றே தூக்கி மடித்து சிம்மாசனத்தின் மீதும், இடது காலை சற்றே நேராகத் தொங்கவிட்ட படியும் அதை தாமரை மலர் தாங்கியுள்ளது போன்றும் காணப்படுகிறது. இக்குடைவரைக்கோயில் மாமல்லனுக்கும், பரமேஸ்வர வர்மனுக்கும், இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததென வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் செங்கல்பட்டு ஏரி, கல்வட்டங்கள்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
செங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் சென்னையிலிருந்து தெற்கில் 48 கிமீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். பிற்காலக் கல்வெட்டுக்களில் இவ்வூர் "நரசிங்க விண்ணகரம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பூசனையில் உள்ள இக்கோயில் பிரசித்திப் பெற்ற வைணவத் தலமாக அமைந்துள்ளது. இக்குடைவரைக் கோயிலையொட்டி மண்டபங்கள் மற்றும் பிற சிற்றாலயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_MON_00115/TVA_MON_00115_செ...

  • TVA_MON_00115/TVA_MON_00115_செ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 123
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்