இராபர்ட்புரூஸ்பூட் கல்லறை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | இராபர்ட்புரூஸ்பூட் கல்லறை |
|---|---|
| அமைவிடம் | ஹோலி டிரினிட்டி சர்ச் |
| ஊர் | ஏற்காடு |
| வட்டம் | ஏற்காடு |
| மாவட்டம் | சேலம் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி |
|
விளக்கம்
இராபர்ட் புரூஸ் பூட் இங்கிலாந்து நாட்டில், 1834ல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களது ஆயுதங்களை கண்டறிந்து, இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக (சர்வேயர்) தன் பணியைத் துவக்கினார். 33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891-இல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு தொல்பழங்காலத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இங்கு, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன், மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை கண்டறிந்தார். இந்த ஆயுதங்கள், சென்னை கற்கோடாரி மரபு வகையைச் சார்ந்தது. கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களையும் சேகரித்தார். இவை அனைத்தும் பூண்டியில், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார். பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது. சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப்பட்ட இராபர்ட் புரூஸ் பூட், டிசம்பர் 29, 1912ல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும். |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | ஏற்காடு ஏரி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலை தொல்லியல் இடங்கள் |
| ஒளிப்படம்எடுத்தவர் | ஆறகழூர் வெங்கடேசன் பொன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Jul 2017 |
| பார்வைகள் | 133 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |