வரலாற்றுச் சின்னம்
அரளிப்பட்டிக் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | அரளிப்பட்டிக் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | அரவங்கிரி எனப்படும் அரளிப்பாறை சிவன்கோயி்ல் |
| ஊர் | அரளிப்பட்டி |
| வட்டம் | திருப்பத்தூர் |
| மாவட்டம் | சிவகங்கை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரிலிருந்தும் சிங்கம்புனரி செல்லும் வழியில் மருதுப்பட்டுப் பிரிவினின்றும் ஏறத்தாழ இரண்டு கி.மீ. தொலைவில் அரளிப்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூருக்குச் செல்லும் வழியில் நீண்ட குன்று ஒன்று காணப்படுகின்றது அக்குன்றின் மீது கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலையடுத்துள்ள சரிவில் குடைவரைக் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி உருவாக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான இக்குடைவரைக் கோயில் கருவறையை மட்டுமே கொண்டுள்ளது. கருவறை வட்டமான ஆவுடையாருடன் கூடிய இலிங்க உருவத்தைத் தாய்ப் பாறையிலேயே கொண்டுள்ளது. கருவறையின் நுழைவாயிலை ஒட்டி வடக்கு நோக்கியுள்ள கோட்டத்தில் முகலிங்கம் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப் பட்டுள்ளது. பொதுவாக முகலிங்கத்தில் ஒன்று முதல் ஐந்து முகங்கள் வரை காணப்படும். இத்தகைய இலிங்கங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. தென் ஆற்காடு மாவட்டத்தில் (தற்போதைய கடலூர், விழுப்புரம்) அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருவதிகையில் நான்கு முகங்களைக் கொண்ட முகலிங்கத்தையும் திருவக்கரையில் மூன்று முகங்களையுடைய மூலவரான முகலிங்கத்தினையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இங்குள்ள முகலிங்கம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. அதில் ஒரு முகம் மட்டும் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகக் குடைவரைக் கோயில்களில் வேறு எங்கும் முகலிங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. கருவறையின் நுழைவாயிலை யொட்டி தெற்கு நோக்கியுள்ள கோட்டத்தில் முற்றுப்பெறாத உருவம் ஒன்று காணப்படுகிறது. இருகால்களும் குத்திட்டு வைத்தவாறும் இது உள்ளது. கையில் உள்ள பொருள் என்னவென்று சரிவரத் தெரியவில்லை. முகத்தில் தாடி போன்ற அமைப்பு காணப்படுகின்றது. பொதுவாக கருவறைக்கு முன் உள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் நின்ற நிலையில் கையில் கதையுடன் காணப்படுவர். இங்கு இந்த வடிவம் அமர்ந்த நிலையிலும் கையில் கதையேதும் இன்றியும் காணப்படுவதால் இது அடியவராக இருக்கலாம்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | அரளிப்பாறை முருகன் கோயில், பிரான்மலை |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
திருப்புத்தூர்ச் சிங்கம்புணரிச் சாலையில், திருப்புத்தூரில் இருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் வலப்புறம் பிரியும் சாலை, அரளிப்பட்டிக்கு அழைத்துச்செல்கிறது. இரண்டு கிலோமீட்டர் தொலைவு அரளிப்பட்டியை அடையலாம். அழகான தாமரைக் குளமும் ஆளரவமின்றி இருக்கும் கரையோர மடங்களும் அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் மஞ்சு விரட்டு மாட்டுக் கொட்டிலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பரந்துகிடக்கும் வெற்று மைதானமும் அரவங்கிரிப் பாறையை முப்புறத்தும் சூழ்ந்துள்ளன. அரவங்கிரியின் தென்சரிவில் கிழக்குப் பார்த்த நிலையில் சிறிய மண்டபக் குடைவரை. தென்வடலாக 2.23 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 90 செ.மீ. அகலமும் கொண்டுள்ள மண்டபத்தின் தரையில், முழுக்காட்டு நீர் வெளியேற ஆழமான, ஒழுங்கற்ற காலொன்று காணப்படுகிறது. மண்டபத்தின் தென், வடசுவர்களில் ஆழமான கோட்டங்கள் வெட்டப்பட்டுள்ளன. தென்சுவரில் 92 செ.மீ. உயரத்தில், 72 செ.மீ அகலத்தில் அமைந்துள்ள 12 செ.மீ ஆழக் கோட்டத்தில் ஆடவர் சிற்பம் ஒன்று நிறைவடையாப் பணியாய் விளைந்துள்ளது. வடசுவரில் 58 செ.மீ. உயரத்தில், 71 செ.மீ. அகலத்தில் வெட்டப்பட்டுள்ள 12.5 செ.மீ ஆழக் கோட்டத்தில், 33 செ.மீ உயரமுள்ள சிறிய அளவிலான இலிங்கபாணம் வெட்டி அதன் முகப்பில் பிள்ளையாரைச் செதுக்கியுள்ளனர். உற்றுப் பார்ப்பவர்களுக்கே இப்பிள்ளையாரின் தரிசனம் கிடைக்கும். மண்டபக் கூரையின் வெளிநீட்டலாய் 10 செ.மீ அளவிற்கு நீளும் பாறைப்பகுதி கபோதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குச் சுவரின் நடுவில் 70 செ.மீ அகலத்தில், 1.80 மீ உயரத்திற்கு நிலை அமைப்போ, அணைவுத் தூண்களோ அற்ற திறப்புச் செய்து கருவறை அகழ்ந்துள்ளனர். தென்வடலாக 2.60 மீ. அளவும் கிழக்கு மேற்காக 2.65 மீ அளவும் கொண்டு சதுரமாக அமைந்துள்ள கருவறையின் உயரம் 2.04 மீ. தரையின் நடுவே பாறையில், உயரக் குறைவானதொரு சதுர தளத்தின்மீது 47 செ.மீ. உயர வேசர ஆவுடையாரும் அதன்மீது 29 செ.மீ உயர உருளைப் பாணமும் செதுக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான கோமுகம் வடபுறம் காட்டப்பட்டுள்ளது. அதன் கீழே தரையில் முழுக்காட்டு நீர் வாங்கும் பள்ளம். இந்நீர் வெளியேறக் கருவறைத் தரையிலும் மண்டபத் தரையிலும் ஆழமான ஒழுங்கற்ற காலொன்று வெட்டப்பட்டுள்லது. தென்கோட்ட ஆடவர் இரண்டு கால்களையும் குத்துக் கால்களாக வைத்து அமர்ந்த நிலையில் வலக்கையை முழங்கால் மீது இருத்தி, இடக்கையின் முழங்கைப்பகுதி இடமுழங்கால் மீது தாங்கலாக இருக்குமாறு கையை மடித்து இடப்புறமாக உயர்த்தியுள்ள இத்தென்கோட்ட ஆடவரின் வெறுமையான செவிகள் நீள்செவிகளாகக் காட்டப்பட்டுள்ளன. உயர்த்தியுள்ள இடக்கையில் சிதைந்த நிலையில் மலர். பாதங்களும் முகமும் சிதைந்துள்ளன(6). தலையில் மகுட அமைப்புகள் ஏதுமில்லை. மரபுப்பகுதியும் இடுப்புப்பகுதியும் சிதைந்திருப்பதால் ஆடை, அணிகலன்களை அடையாளம் காணக்கூடவில்லை. வடகோட்டப் பிள்ளையார் இலலிதாசனத்தில் உள்ள இப்பிள்ளையார் இடம்புரியாகக் கரண்ட மகுடராய்க் காட்டப்பட்டுள்ளார். வயிற்றின் நடுவே உதரபந்தம். இடமுன்கை வயிற்றருகே உள்ளது. துதிக்கையின் கீழ்க் காணப்படும் வலமுன்கை சிதைந்துள்ளது. பின்கைப் பொருட்களை அடையாளம் காணக்கூடவில்லை. தமிழ்நாட்டுக் குடைவரைகள் எவற்றிலும் இடம்பெறாத இந்த இலிங்கப் பிள்ளையார் சிதைந்திருந்தபோதும் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார். இக்குடைவரையின் எளிய அமைப்பு, சிவகங்கை மாவட்டக் குன்னத்தூர்க் குடைவரைத் தொகுதியின் முதற் குடைவரையை நினைவூட்டுகிறது. கட்டமைப்பு, சிற்பங்கள் கொண்டு இதன் காலத்தைக் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியாகக் கொள்ளலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 134 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |