வரலாற்றுச் சின்னம்
சித்தன்னவாசல் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் சித்தன்னவாசல் குடைவரை
அமைவிடம் சித்தன்னவாசல் மலை
ஊர் சித்தன்னவாசல்
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
மலையின் சரிவில் மேற்கு நோக்கி குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கருவறை மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இதன் முகப்பில் இரண்டு தூண்களும் சுவரையொட்டி இரண்டு அரைத்தூண்களும், மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எட்டுப்பட்டைகளுடனும் காணப்படுகின்றன. இவற்றிற்கு இடையில் நடுவில் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகை காணப்படுகிறது. கருவறை முன் காணப்படும் அரைத்தூண்களும் முகப்புத் தூண்களைப் போன்றே அமைப்பினைக் கொண்டவை. நடுவில் உள்ள எட்டுப் பட்டைகளில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் முன் கைப்பிடிகளுடன் கூடிய படிகள் உள்ளன. மண்டபத்தின் வடபுறச் சுவரில் சமண முனிவரின் வடிவம் சிற்ப உருவில் உருவாக்கப்பட்டுள்ளது. இவரது தலைக்கு மேல் குடையொன்று காணப்படுகின்றது. எதிரில் உள்ள தென்புறச் சுவரில் தலைக்குமேல் ஐந்து தலை நாகத்தினையுடைய ஒரு சமண முனிவரின் வடிவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னவர் சமயத் தலைவர் என்றும் பின்னவர் ஏழாவது தீர்த்தங்கரர் (பார்சுவநாதர் ) என்றும் கருதப்படுகின்றனர். கருவறையின் பின்புறச் சுவரில் மேலும் மூன்று தீர்த்தங்கரர்களின் வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆதிநாதர், மகாவீரர் நேமிநாதர் ஆகியோர் ஆவர். இவர்களின் தலைக்கு மேல் மூன்று குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட ஐந்து சமண முனிவர்களின் வடிவங்களும் அமர்ந்த தியான நிலையில் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வோவியங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. பாறையின் மீது சுதைப்பூச்சை மிக மெல்லிய கனத்தில் அமைத்து அவற்றின் மீது இவ்வோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கருவறையின் விதானத்தில் நடுவில் தாமரை மலர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும் பல சதுர அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு சதுர அமைப்பிலும் நான்கு மூலைகள் கொண்டு நான்கு சிறிய சதுர அமைப்புகள் தீட்டப்பெற்றுள்ளன. இடையில் சுவஸ்திகக் குறி காணப்படுகின்றது. இந்தக் குறியின் நான்கு மூலைகளும் துறக்கம் (சுவர்க்கம்), நரகம், மனிதன், விலங்கு ஆகியவற்றைக் குறிப்பனவாகும். இக்குறிகளின் நாற்புறங்களில் அமர்ந்த நிலையில் இரு முனிவர்களும் ஆடு, சிங்கம் போன்ற விலங்குகளும் உள்ளன. ஆட்டினை யொட்டிய வடிவம், ஆட்டைச் சின்னமாகக் கொண்ட பதினேழாவது தீர்த்தங்கரரான குந்தநாதன் என்றும், சிங்கத்தை யொட்டிய வடிவம் அதனைச் சின்னமாகக் கொண்ட இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான "மகாவீர வர்த்தமானர்" என்றும் கூறுவர். மண்டபத்தின் விதானத்தில் தாமரை மலர்கள் நிறைந்த குளம் ஒன்று ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அதில் மீன், அன்னம், எருமை போன்ற உருவங்கள் காட்சியளிக்கின்றன. மேலும் மூன்று சமணர்களின் உருவங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் தாமரை மலர்களைப் பிடித்த நிலையிலும், மூன்றாமவர் இடக்கையில் பூக்கூடையை ஏந்தியவாறும் வலக்கையால் பூக்களைப் பறிக்கும் நிலையிலும் காணப்படுகின்றார். தாமரைக்குளம் கடுகை பூமி என்றும் இது சமணர்களின் சமண சரணத்தின் ஒரு பகுதி என்றும் கூறுவர். தற்பொழுது ஓவியங்களின் பெரும் பகுதி கால வெள்ளத்தால் அழிந்து போய் உள்ளன. மண்டபத்தின் முகப்பில் உள்ள இரு தூண்களின் முன்புறம் இரண்டு நடனப் பெண்களின் வடிவங்கள் இடுப்பு அளவு வரை ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. இடப்புறம் உள்ள பெண்ணின் இடக்கை நீண்டுள்ளது. இது யானை தன் துதிக்கையை நீட்டியுள்ளது போன்று அமைந்துள்ளது. இதனை கஜமுத்திரை என்பர். வலது உள்ளங்கை சதுர அமைப்பினைக் கொண்டதாக வரையப்பட்டுள்ளது. இந்நிலை மிகவும் உயர்ந்த ஓவிய முத்திரையாகும். வலது தரணில் உள்ள நடனப் பெண்ணின் வலக்கை விரல்களும் உள்ளங்கையும் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. இவளது இடக்கை கொடி போன்று நீட்டிய நிலையில் அழகுறத் தீட்டப்பட்டுள்ளது. இப்பெண்ணின் மூக்கில் மூக்கணி அணிந்து காணப்படுகின்றாள். நடனப் பெண்கள் அணியும் அணிகலன்கள், கூந்தலை அலங்கரிக்கும் முறை, மேலாடை அணியும் தன்மை மற்றும் நடனக் கலையின் நுட்பங்கள் போன்றவற்றின் சிறப்பினை இவ்வோவியத்தின் மூலம் அறிய முடிகிறது. இடப்புறத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் அரசன், அரசி ஆகியோரின் வடிவங்கள் ஓவியமாகக் காட்சியளிக்கின்றன. கிரீட மகுடத்துடன் அரசனின் வடிவமும் அவனது மிடுக்கான தோற்றமும் ஓவியக்கலையின் சிகரமாகக் காணப்படுகிறது. இக்குடைவரை பாண்டியர்களின் கலைக் கருவூலமாகும். மேலும் இங்குள்ள பாண்டியப் பேரரசன் வரகுணன் சீவல்லபனின் கல்வெட்டு இக்குடைவரைக் கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆசிரியனான இளங் கௌதமன் என்பான் இங்கே உள்ள மண்டபத்தைத் திருப்பணி செய்ததும் கோயிலுக்கு முன்னால் மற்றொரு மண்டபம் அமைத்ததும் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. இக்குடைவரைக்கோயில் சிற்பம், ஓவியம், நடனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சிறந்த கலைக்கூடமாகத் திகழ்வதுடன் பாண்டியர் களின் கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் சித்தன்னவாசல் ஓவியம், நார்த்தாமலை, புதுக்கோட்டை அருங்காட்சியகம், புதுக்கோட்டை அரண்மனை
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சித்தன்னவாசல் பாதையின் பிரிவில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நீண்டதொரு மலை இங்கு காணப்படுகிறது. அறிவர் கோயில் என அழைக்கப்படும் இக்குடைவரை தமிழகத்தில் சமண முனிவர்களின் புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய ஒரே குடைவரைக் கோயில் ஆகும். சமண முனிவர்களின் பாறைப் படுக்கைகளும் புடைப்புச் சிற்பங்களும் இங்கு உள்ளன. மலை மீது இயற்கையாக அமையப்பெற்ற குகைகள் உள்ளன. படுக்கைகளும் கல்வெட்டுகளும் மலையின் மேற்பகுதியில் காணப்படுகின்றன
குறிப்புதவிகள்
சித்தன்னவாசல் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 452
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்