அகழாய்வு

மோட்டூர்
அகழாய்விடத்தின் பெயர் | மோட்டூர் |
---|---|
ஊர் | மோட்டூர் |
வட்டம் | செங்கம் |
மாவட்டம் | திருவண்ணாமலை |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1978-79 |
அகழாய்வு தொல்பொருட்கள் | வழவழப்பான கறுப்பு, கறுப்பு – சிவப்பு மற்றும் சிவப்பு நிற மட்கலன்கள், காலுடன் கூடிய கூம்பு வடிவ மட்கலன்கள், அகன்ற வாயினை உடைய மட்கலன்கள் நீண்ட கழுத்துடைய மட்கலன்கள், தாங்கிகள், கிண்ணங்கள், தாய்த்தெய்வ உருவக்கல், செம்பினாலான கிண்ணம், மானின் உருவம், வளையல்கள் போன்றவையும் இரும்பினாலான கத்திகள், உளி, குறுவாள், அரிய கல்மணிகள், ஈமப்பேழைகளின் உள்ளே மனித எலும்புகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
விளக்கம்
மோட்டூர் தாய்த்தெய்வக்கல் (anthropomorphic figure) இக்கல்வட்டங்கள் ஒன்றில் மனித உருவமுடைய தாய்த் தெய்வக் கல் ஒன்றையும் நரசிம்மய்யா அவர்கள் கண்டுபிடித்தார். ஒரு பெரிய கற்பலகையை மனித உருவத்தை ஒத்த அமைப்பில் செதுக்கி கல் வட்டத்தின் ஒரு கல்லாகப் பயன்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் முதன்முதலாக மோட்டூரில் தான் இத்தகு தாய்த்தெய்வக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உண்மையை ஆயவும் பெருங்கற்காலச் சின்னங்களுள் நான்கினை அகழாய்வுகள் மேற்கொண்டதில் ஒரு குழியில் எவ்வித சிதைபாடுகளும் காணப்படவில்லை. மற்ற மூன்று குழிகள் சிதைந்து காணப்பட்டன. அகழாய்வு ஈமக்குழிகள் மூன்றும் 75 செ.மீ. ஆழத்திற்கு தோண்டப்பட்டன. இவற்றில் கருங்கற் பலகைகளால் அமைக்கப்பட்ட கற்பதுக்கைகள் காணப்பட்டன. இவை யாவும் சிதைந்தே இருந்தன. இவற்றின் அடியில் இயற்கையாக அமைந்த கருங்கற் பாறைகளைக் குடைந்து குழியாக ஏற்படுத்தி இப்பலகைகளை அமைத்துள்ளனர். நான்காவது ஈமக்குழி 1.66 மீ. அளவிற்குத் தோண்டப்பட்டது. கற்பலகைகள் சில 10 செ.மீ. தடிப்பும் சில 18 செ.மீ. தடிப்பும் கொண்டிருந்தன. இவை சுவஸ்திக வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இதன்மேல், மூடி போன்ற தொப்பிக்கல் (Capstone) காணப்படவில்லை. கற்பதுக்கைகளின் கிழக்குக் கற்பலகையில் இடுதுளை காணப்பட்டது. ஈமக்குழிகளில் பெருங்கற்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மட்கலன்களும் ஈமப்பேழைகளும் காணப்பட்டன. ஈமப்பேழைகள் கிழக்கு மேற்கு நோக்கியவாறு இக்குழிகளில் புதைக்கப்பட்டிருந்தன. இவை மூடிகளற்றுக் காணப்பட்டன. இவற்றுடன் செம்பினாலான கிண்ணம், மானின் உருவம், வளையல்கள் போன்றவையும் இரும்பினாலான கத்திகள், உளி, குறுவாள், அரிய கல்மணிகள் ஆகியவையும் கிடைத்தன. ஈமப்பேழைகளின் உள்ளே மனித எலும்புகள் இருந்தன. நான்காவது ஈமச்சின்னத்தில் இரண்டு பெரிய ஈமப்பேழைகள் காணப்பட்டன. இவற்றிற்கு மேற்குப் பக்கத்தில் மேலும் இரண்டு சிறிய ஈமப்பேழைகள் இருந்தன. முதலாவது ஈமக்குழியில் 3 ஈமப்பேழைகளே இருந்தன. பிற இரண்டு ஈமக்குழிகளிலும் ஒருஈமப்பேழை மட்டுமே காணப்பட்டன. இவை யாவும் கால்களுடன் இருந்தன. ஈமப்பேழைகளை ஒட்டியவாறு பானைகள் புதைக்கப்பட்டிருந்தன. சில மட்கலன்கள் ஈமப்பேழைகளின் மேற்புறத்திலும் காணப்பட்டன. இம்மட்கலன்கள் சிலவற்றிலும் பறவை எலும்பின் எச்சங்களும் சிறிய இரும்புக் கத்திகளும் இடப்பட்டிருந்தன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மட்கலன்கள் யாவும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்டவை. வழவழப்பான கறுப்பு, கறுப்பு – சிவப்பு மற்றும் சிவப்பு நிற மட்கலன்கள் இங்கு கிடைத்தன. இவற்றுள் சிவப்பு மட்கலன்களே மிகுந்து காணப்பட்டன. காலுடன் கூடிய கூம்பு வடிவ மட்கலன்கள், அகன்ற வாயினை உடைய மட்கலன்கள் நீன்ட கழுத்துடைய மட்கலன்கள், தாங்கிகள், கிண்ணங்கள் போன்றவை இவ்வகழாய்வில் கிடைத்த மட்கலன்களில் சிலவாகும். சில மட்கலன்களின் சிவப்பு வண்ணக் கோடுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஈமச்சின்னம் 1 இல் தான் தாய்த்தெய்வ உருவக்கல் காணப்பட்டது. இது கல்வட்ட அமைப்பில் மூன்று கற்பலகைகளை வட்டமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. தாய்த்தெய்வ வடிவமுடைய கல் தெற்கு நோக்கிய நிலையில் நடப்பட்டிருந்தது. இது 3.25 மீ. அகலமும் உயரமும் உடையது. கழுத்தற்று தோள்பட்டைகளுடன் இடையில் குறுகி மனித உருவத்தைப் போன்று இக்கல் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் சமய நம்பிக்கை கொண்டு விளங்கினர் என்பதும் தாய்த்தெய்வ வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவவழிபாட்டினை ஏற்படுத்தியுள்ளனர் என்பதும் மோட்டூரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாய்த்தெய்வ உருவக் கல்லின் மூலம் அறியலாம்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் மோட்டூர். திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பெருங்கற்காலச் சின்னங்கள் பெருமளவில் உள்ளன. செங்கம் பகுதி பண்டைக்காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதியாக விளங்கியுள்ளது. இப்பகுதியில் பல இடங்களில் பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ளன. சங்ககாலத்தில் இப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மோட்டூரின் மேற்கிலுள்ள மலையடிவாரப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதை முனைவர் B. நரசிம்மய்யா அவர்கள் களஆய்வின் பொழுது கண்டுபிடித்தார். இக்கல்வட்டங்கள் 3.5 மீலிருந்து 12மீவரை விட்டங்களை உடையவை. வேலூர் மலை எனக் கூறப்படும் இம்மலையின் கிழக்குப்பகுதி முழுவதும் ஏறக்குறைய 7 ஹெக்டேர் பரப்பளவில் இச்சின்னங்கள் காணப்படுகின்றன. இவை யாவும் உள்ளூர் மக்களால் பல்வேறு காலகட்டத்தில் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு நிலவிய பெருங்கற்கால ஈமச்சின்னங்களுடன் தாய்த்தெய்வ வழிபாட்டினைத் தொடர்புபடுத்தவும் அகழாய்வுகளை இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் திரு. L.K. சீனிவாசன் தலைமையில் 1978-79 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை மேற்கொண்டனர்.
|
|
குறிப்புதவிகள்
தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
|
அகழாய்வு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 33 |
பிடித்தவை | 0 |