வரலாற்றுச் சின்னம்
வீரசிகாமணி குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | வீரசிகாமணி குடைவரை |
|---|---|
| அமைவிடம் | வீரசிகாமணி குடைவரை |
| ஊர் | வீரசிகாமணி |
| வட்டம் | சங்கரன்கோவில் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
பாண்டியர் குடைவரைகளில் மிகச் சிறந்த குடைவரைகளுள் ஒன்றாக இது விளங்குகிறது. குடைவரைக்கோயிலின் முன்புறம் இருபெருந் தூண்களும் பக்கவாட்டுச் சுவரில் இரு அரைத்தூண்களும் மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எட்டுப் பட்டைகளுடனும் காணப்படுகின்றன. நடுவில் பட்டையுடன் கோணவடிவுடனும் வரிவரியாக தரங்கப் போதிகைகள் இடையிடையே அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் அனைத்துச் சதுரங்களிலும் அழகிய தாமரை இதழ்கள் நான்கு புறமும் செதுக்கப்பட்டுள்ளன. இதைப்போன்றே பக்கவாட்டு அரைத்தூண்களில் உள்ள சதுரங்களில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளன மேற்புறக் கோட்டத்தில் விநாயகர் சிற்பம் ஒன்று சிறந்த முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இவரது துதிக்கை இடமாகவோ வலமாகவோ இல்லாமல் கீழ்நோக்கிய நிலையில் தொங்குகிறது. பிறிதொரு சிற்பம் சிதைந்த கைகளுடன் கீழ்ப்புறக் கோட்டத்தில் காணப்படுகிறது. இது முருகன் சிற்பமாகும். இந்தச் சிலை சமபங்க நிலையில், பன்னிரு கைகள் சிதைந்த நிலையில் உள்ளன. இவற்றுள் இரண்டு கைகளை இடுப்பில் வைத்தவாறு இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு சிற்பங்களும் சிதைந்து உள்ளன. குடைவரையின் முன்புறம் நந்தி ஒன்றும், இவை அனைத்தையும் சுற்றிச் சுவர்களும் எழுப்பப் பட்டுள்ளன. மண்டபத்தின் உள்ளே மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் கோட்டங்களில் உள்ள சிற்பங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இச்சிற்பங்களை மக்கள் தருமர், சகாதேவன், நகுலன் எனக் குறிப்பிடுகின்றனர். மண்டபத்தின் வடபுறத்தில் கருவறை குடைந்தெடுக்கப் பட்டுள்ளது இதன் இருபுறங்களிலும் கோணவடிவுடன் கூடிய போதிகையுடன் அரைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்கால நந்தியொன்று மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் சதுர வடிவில் உள்ள ஆவுடையாருடன் இலிங்கத் திருமேனி ஒன்று தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இவர் "கைலாசநாதர்" எனப்படுகின்றார். கருவறையில் அபிஷேக நீர் வெளியே செல்ல கால் அமைக்கப்பட்டுள்ளது இருப்பினும் கருவறையை விட்டு நீர் வெளியேற வழி இல்லை. இக்குடைவரை தற்சமயம் பூசனையில் உள்ளது. கருவறையின் இருபக்கங்களிலும் வாயிற்காவலர் உருவங்கள் அமைந்துள்ளன. இவர்கள் இரு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளனர். மேற்புறம் உள்ளவர் தலையில் கிரீட மகுடம் தரித்து ஒரு கையைக் கதையின் மேலும் மற்றொரு கையைத் தடி பிடித்திருக்கும் கைமீதும் இருத்தி கீழே தொங்கவிட்ட நிலையில் காட்டப்பட்டுள்ளார். இவரது கதையைச் சுற்றி அரவம் ஒன்றும் காணப்படுகின்றது, இவர் திரிபங்க நிலையில் காணப்படுகின்றார். கங்கணங்களும் உருத்திராட்ச வளைகளும், பனையோலைக் குண்டலங்களும் கழுத்தணிகலன்களும் இவர் அணிந்துள்ளார். முப்புரிநூல் மார்பில் காணப்படுகிறது. மக்கள் இவரை பீமர் எனக் குறிப்பிடுகின்றனர். கீழ்ப்புறத்தேயுள்ள வாயிற்காவலர் ஜடாபாரத்தை மகுடம் போன்று அணிந்து சம்பங்க நிலையில் ஒரு கையை இடுப்பில் ஊன்றி மற்றொரு கையைக் கருவறையைக் காட்டி நின்ற நிலையில் காணப்படுகின்றார். இவரை அர்ச்சுனர் எனக் குறிப்பிடுகின்றனர். இவரும் அணிகலன்கள் அணிந்து காணப்படுகிறார். குடைவரை மண்டபத்தில் ஐந்து சிற்பங்கள் காணப்படுவதால் இவற்றை இப்பகுதி மக்கள் பஞ்சபாண்டவர் எனக் கூறி வருகின்றனர். குடைவரையின் முகப்பில் உள்ள வடக்கு அரைத்தூண் கல்வெட்டில், பிற்காலப் பாண்டிய மன்னன் சுந்தர சோழ பாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு பற்றி குறிப்பு உள்ளது. வட்டெழுத்து கல்வெட்டான இது முடி கொண்ட சோழவள நாட்டில் உள்ள கல்லக நாட்டின் வீரவிநோத சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கையிலாயத்துப் பெருமானடிகளுக்கு விளக்கெரிக்க நிவந்தம் அளித்த செய்தியைக் கூறுகிறது. குடைவரை அமைப்பின்படி இது கி.பி. எட்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தைச் சார்ந்தது எனலாம். இக்குடை வரையின் அமைப்பும் சிற்பங்களும் திருக்கோளக்குடி குடைவரையை ஒத்துள்ளன. பரிவாரக் கடவுளர்கள் உள்ள குடைவரையாக இது திகழ்கிறது. இம்மலையின் மேலே பாறைகளுக்கிடையே உள்ள இயற்கையான அமைப்பு குகை போன்றுள்ளது. இவை படுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. சமண முனிவர்கள் இங்கு வாழ்ந்துள்ளமையை இவை தெளிவுபடுத்துகின்றன. இங்கு கிரந்த எழுத்தில் கல்வெட்டொன்று உள்ளது. இவ்வூர் 11 ஆம் நூற்றாண்டில் வீரவிநோத சதுர்வேதி மங்கலம் என வழங்கலாயிற்று.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருமலாபுரம் குடைவரை |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோயிலிலிருந்து சேந்தமாரம் செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் வீரசிகாமணி என்னும் சிற்றூர் உள்ளது. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மலையின் தென்புறத்தில் இயற்கையாக அமைந்துள்ள மலைச்சரிவில் குடைவரைக்கோயில் உள்ளது. பாறைகளில் அமைக்கப்பட்ட கைப்பிடிகளுடன் கூடிய படிகள் மீதேறி இக்குடைவரைக் கோயிலை அடையலாம். பாண்டியர் குடைவரைகளில் மிகச் சிறந்த குடைவரைகளுள் ஒன்றாக இது விளங்குகிறது. குடைவரைக்கோயிலின் முன்புறம் இருபெருந் தூண்களும் பக்கவாட்டுச் சுவரில் இரு அரைத்தூண்களும் மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எட்டுப் பட்டைகளுடனும் காணப்படுகின்றன. நடுவில் பட்டையுடன் கோணவடிவுடனும் வரிவரியாக தரங்கப் போதிகைகள் இடையிடையே அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் அனைத்துச் சதுரங்களிலும் அழகிய தாமரை இதழ்கள் நான்கு புறமும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு இக்குடைவரையின் சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 294 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |