வரலாற்றுச் சின்னம்
அரிட்டாப்பட்டிக் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | அரிட்டாப்பட்டிக் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | அரிட்டாப்பட்டி சிவன்கோயில் |
| ஊர் | அரிட்டாப்பட்டி |
| வட்டம் | மதுரை கிழக்கு வட்டம் |
| மாவட்டம் | மதுரை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
கருவறை வாயிலின் இருபுறமும் வாயிற்காவலர் சிலைகள் புடைப்புச் சிற்பமாகக் கொண்ட கூடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரு கைகளையுடைய இவர்கள் திரிபங்க நிலையில் நேரானப் பார்வையை உடையவர்களாக அமைக்கப்பட்டுள்ளனர். வாயிலின் இடப்புறம் உள்ள உருவத்தின் இடக்கைப் பதாக முத்திரையிலும் வலக்கைக் கதை மீது ஊன்றியவாறும் அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடத்திற்குப் பின்னால் எழில் மிக்க அரை வட்டம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. தோள்களில் வாகுவளை, கைகளில் கடகம், மார்பினில் மாலைகள், இடுப்பில் கடிபந்தம் போன்ற அணிகலன்களால் இவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். மார்பில் முப்புரி நூல் குறுக்காக இடுப்புவரை காணப்படுகிறது. இவ்விரண்டு சிலைகளும் நல்ல கலையழகு கொண்ட சிற்பங்களாகும். குடைவரையின் முகப்பில் சுவற்றையொட்டி இரு அரைத் தூண்கள் மட்டுமே உள்ளன. குடைவரைக் கோயில்களின் முகப்பில் பொதுவாகக் காணப்படும் தூண்கள் இங்கு காணப்படவில்லை. அரைத்தூண்களையொட்டி நடுவில் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முகப்பில் அரைத்தூண்களுக்கு அருகில் இருபுறத்திலும் இரு கோட்டங்கள் அமைந்துள்ளன. இடப்புறம் உள்ள கோட்டத்தில் நான்கு கரங்களுடன் கூடிய எழில் மிகு விநாயகர் சிற்பம் உள்ளது. பின் வலக்கையில் பாசம், பின் இடக்கையில் அங்குசம் முன் வலக்கையில் மோதகம் காணப்படு கின்றன. முன் இடக்கையில் உள்ள பொருள் சரியாகத் தெரியவில்லை. தலையில் கரண்டமகுடமும் ஆடை அணிகலன்களுடனும் இவ்வழகிய சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. விரிந்த இரு காதுகளைக் கொண்ட இவ்விநாயகர் யோக நிலையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்துள்ளார். வலப்புறம் உள்ள கோட்டத்தில் இரு கைகளைக் கொண்ட உருவம் சுகாசனத்தில் அமைந்துள்ளது. வலக்கை தொடை மீதும் இடக்கையில் நாகம் சுற்றிய தடியும் (இலகுதம்) உள்ளன. கழுத்தினில் மாலையும் அணிகலன்களுடனும் தலையில் கரண்ட மகுடமும் கொண்டு இவ்வுருவம் அமைக்கப்பட்டுள்து. இது சண்டிகேஸ்வரர் உருவம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதன் அமைப்பு இலகுலிசர் சிற்பமாக விளங்குவதாக அமைந்துள்ளது. தேவர்மலைக் குடைவரையிலும் இதே போன்று சிற்பம் காணப்படுகிறது. இக்குடைவரையும் இலகுலிச வழிபாட்டிற்குச் சிறந்து விளங்கிய இடமாக விளங்கி வந்துள்ளது. குடைவரைக்கு முன்னால் மண்டபம் கட்ட ஏற்றவாறு அதன் மேற்புறத்தில் துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நந்தியம் பெருமானை தனியே உருவாக்கிக் காட்டியுள்ளனர்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | அரிட்டாப்பட்டி தமிழ்-பிராமிக் கல்வெட்டு சமணப் படுக்கைகள் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள நரசிங்கப் பட்டி என்ற சிற்றூரின்றும் ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவில் அரிட்டாப்பட்டி என்ற ஊர் உள்ளது. ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மலையில் மேற்கு நோக்கியவாறு இக்குடை வரைக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையாக உள்ள மலைச்சரிவினில் இதனை உருவாக்கியுள்ளனர். இம்மலையைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மேலும் மலைத்தொடர்கள் பல காணப்படுகின்றன. இவ்விடம் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகின்றது. இங்குள்ள குடைவரைக்கோயில் கருவறை மற்றும் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது. கருவறையின் உள்ளே வட்டமான ஆவுடையாருடன் இலிங்கத் திருமேனி உருவாக்கப்பட்டுள்ளது. அபிஷேக நீர் வெளியேற கால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் தாமரை மலரைக் கொண்ட அமைப்பு காணப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 98 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |