சிற்பம்
மெய்ப்பொருள் நாயனார்
மெய்ப்பொருள் நாயனார்
சிற்பத்தின் பெயர் | மெய்ப்பொருள் நாயனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
63 நாயன்மார்களுள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூரில் வாழ்ந்த மன்னர் ஆவார். அடியார்கள் திருநீறு பூசி, உருத்திராட்ச மாலை அணிந்து காட்சி தரும் திருவேடத்தையே மெய்ப்பொருள் (உண்மைக் காட்சி / உண்மைப் பொருள்) எனக் கொண்டவர். இதனால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார். இவர் மலையமான் குலத்தில் தோன்றியவர். பகைவர்களை வென்று நாட்டுக்கு நன்மை செய்பவர். சிவன் அடியார்களின் கருத்து அறிந்து பணி செய்பவர். தமது செல்வம் எல்லாம் சிவனடியார் செல்வமே என்று கருதுபவர். சிவன் கோயில்களில் பூசை, விழா முதலியவற்றை இடைவிடாமல் செய்து இறைவழிபாட்டில் ஈடுபட்டவர். மெய்ப்பொருள் நாயனாரிடம் முத்தநாதன் என்பவன் பகை கொண்டு இருந்தான். அவனுக்கும் நாயனார்க்கும் பலமுறை போர்கள் நிகழ்ந்தன. ஒரு முறை கூட முத்தநாதன் வெற்றி பெற முடியவில்லை. 'நேர் நின்று போர் புரிந்தால் இந்த நாயனாரை வெல்ல முடியாது' என்று அவன் எண்ணினான். நாயனார் சிவன் மீது கொண்ட பக்தியையும் திருநீற்றின் மேல் கொண்ட பற்றையும் அறிந்தான். அடியார் போல் வேடம் பூண்டு நாயனாரைக் கொல்வதற்காகச் சூழ்ச்சி செய்தான். பொய் வேடம் புனைந்த முத்தநாதன் அடியாரின் அரண்மனையை அடைந்தான். வாயில் காப்போர் சிவனடியார் என்று எண்ணி அவனைப் போக விட்டனர். பல வாயில்களையும் கடந்து மன்னரின் பள்ளியறை வாயிலை அடைந்தான். அங்கிருந்த தத்தன் என்னும் வாயில் காப்போன் “மன்னர் உறங்கும் நேரம்” என்று முத்தநாதனைத் தடுத்தான். அதனையும் மீறி “மன்னனுக்கு உறுதிப் பொருளைக் (வீடுபேறு தருவதற்குரிய வழி முறை) கூறப் போகிறேன் என்னைத் தடுக்காதே” என்று, தத்தனை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். கண் விழித்த நாயனார், முத்தநாதனைச் சிவன் அடியார் என்று எண்ணி வணங்கினார். “அடியவரே இங்கு வந்ததன் நோக்கம் என்ன” என்று பணிந்து கேட்டார். முத்தநாதன், “இறைவன் அருளிச் செய்த ஆகமங்களுள் ஒன்று என்னிடம் இருக்கின்றது. அது வேறு எங்கும் இல்லாதது. அதனை உமக்குக் கூறவே வந்தேன்” என்று பொய் கூறினான். இதனைக் கேட்ட நாயனார் அகம் மகிழ்ந்தார். அந்த ஆகமத்தைக் கூற வேண்டினார். முத்தநாதன் “உன் மனைவி இங்கே இருத்தல் கூடாது. நீயும் நானும் தனித்து இருந்து அந்த ஆகமத்தை அறிய வேண்டும்” என்றான். உடனே மன்னன் அரசியாரை அனுப்பி விட்டுப் பொய் வேட அடியாரைப் பீடத்தில் அமர்த்தித் தான் கீழே அமர்ந்து, “அன்பரே அருள் செய்க” என்றார். முத்தநாதன் தன்னுடைய கைகளில் வைத்திருந்த வஞ்சகமாகிய சுவடிப் பையை மடிமேல் வைத்து ஏட்டுச் சுவடியைப் பிரிப்பவன் போல் பாவனை செய்தான். மெய்ப்பொருள் நாயனார், தன்னைப் பணிந்து வணங்கும் சமயத்தில் உடைவாளை உருவி அவரை வெட்டினான். தான் செய்ய நினைத்ததைச் செய்து முடித்தான். அப்போதும் நாயனார், அவனது உடம்பில் உள்ள தவவேடமே உண்மையான உறுதிப் பொருள் என்று எண்ணி அவனை வணங்கினார். தாம் கொண்ட கொள்கையில் இருந்து மாறாது வெற்றி பெற்றார். முத்தநாதன் உள்ளே நுழைந்தபோதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான். முத்தநாதன் செய்த செயலைக் கண்டு நொடிப் பொழுதில் அரசனை அணுகினான்; அங்கிருந்த முத்தநாதனை வாளினால் கொல்லப் போனான். அப்பொழுது குருதி கொப்புளிக்க வீழ்ந்து கொண்டிருந்த நாயனார் “தத்தனே இவர் நம்மவர்; சிவனடியார்” என்று தடுத்துச் சாய்ந்தார். சாய்ந்த நாயனாரைத் தாங்கிய தத்தன் “எனக்கு உள்ள பணி யாது” என்று வினவினான். நாயனாரும் "இந்த அடியார்க்கு வழியில் எவராலும் தீங்கு நேராதவாறு காத்து, இவரைக் கொண்டு போய் விட்டு விடு" என்று ஆணை இட்டார். ஆணைப்படியே தத்தன் அந்த வஞ்சகனை அழைத்துச் சென்றான். அரண்மனையில் நிகழ்ந்ததை அறிந்தவர்கள் எல்லாரும் ஆங்காங்கே முத்தநாதனை வளைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எல்லாம் அரசர் சொன்னதைத் தத்தன் எடுத்துக் கூறி விலக்கினான். ஒருவாறு மக்களிடம் இருந்து முத்தநாதனைக் காப்பாற்றி, வாள் ஏந்தி மக்கள் வாராத இடத்தில் அவனை விட்டான். முத்தநாதனை விடுத்து வந்த தத்தன் அரசனை வணங்கி, "தவ வேடத்தால் வெற்றி அடைந்தவர்க்கு எந்த இடையூறும் இல்லாமல் விட்டு வந்தேன்" என்று கூறினான். அதனைக் கேட்ட நாயனார் "இன்று எனக்கு இந்த உதவியைச் செய்தவர் மதிப்பிற்குரியவரே; வேறு யார் இந்த உதவியைச் செய்ய வல்லவர்" என்று, தத்தனை அருளோடு நோக்கிக் கூறினார். பின்பு எல்லாரிடமும் திருநீற்று நெறியை (சிவவழிபாட்டை) அன்புடன் பாதுகாக்குமாறு வேண்டினார். தில்லை இறைவனை நினைத்து வேண்டிடச் சிவபெருமான் மெய்ப்பொருள் நாயனார்க்குக் காட்சி கொடுத்து, அவரைத் தமது திருவடி நிழலில் சேர்த்து அருளினார். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள இச்சிற்பத் தொகுதியில் பொய்யாய் சிவனடியார் வேடமணிந்த முத்தநாதனின் வஞ்சனைச் செயலால் மெய்ப்பொருள் நாயனார் வீழ்ந்து கிடக்கின்றார். வாயில் காவலன் தத்தன் மன்னனுக்கு நிகழ்ந்த இக்கொடுமையைக் கண்ணுற்று, வெகுண்ட சினத்துடன் தனது வாளை உருவி முத்தநாதனை கொல்ல முற்படுகிறான். வெகுண்ட சிங்கத்தின் பிடியில் மாட்டிக் கொண்ட எலியாய் வஞ்சகன் முத்தநாதன் செய்வதறியாது விழிக்கிறான். வீழ்ந்து கிடக்கும் மெய்ப்பொருள் நாயனார்க்கு இடப வாகனத்தில் உமா சகிதராய் காட்சியருளி தன் திருவடி நீழலில் சேர்க்கிறார் இறையனார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
மெய்ப்பொருள் நாயனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 19 |
பிடித்தவை | 0 |