Back
சிற்பம்

குங்கிலியக்கலய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார்
சிற்பத்தின் பெயர் குங்கிலியக்கலய நாயனார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
குங்கிலியக்கலய நாயனார் 63 சிவ பக்தர்களுள் ஒருவர்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
குங்கிலியக்கலய நாயனார் என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர். காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற தலத்தில் கலயனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவர் அங்குள்ள அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கடவூர் அமிர்தகடேசருக்கு தூபம் இடும் திருப்பணியை நியதியாக தவறாது செய்து வந்தார். குங்கிலியத்தால் தூபம் இட்டதால் குங்கிலியக் கலயர் என்றழைக்கப்பட்டார். சிவப்பணியை இடையறாது செய்து வரும் வேளையிலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்ல நிலம் முழுவதையும், அடிமைகளையும் விற்றுப் பணிசெய்தனர். வறுமை மேலும் முடுகியதனால் தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணர்வுக்கான பொருள் ஒன்றும் இன்றி இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இதுகண்ட மனைவியார் கணவனார் கையிற் குற்றமற்ற மங்கல நாணில் அணிந்த தாலியை எடுத்துக் கொடுத்து "இதற் நெல்கொள்ளும்" என்றனர். அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கிலியப் பொதிகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் "இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது? என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார். அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவன் திருவருளினாலே கலயனாரது மனை முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக ஆக்கி வைத்தார். அதனைக் கண்டு வியந்த குங்கிலியக் கலயர் மிகுந்த செல்வமுடையவராகி அடியவர்க்கெல்லாம் அமுது வழங்கி இன்புற்றிருந்த இந்நாளில், திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வு போக்கி கண்டு வணங்க வேண்டுமென்று ஆசை கொண்ட சோழ மன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிர்த்த முயன்றான். நேர் நிமிர்த்த முடியாது அரசன் கவலையுற்றான். இதனைக் கேள்வியுற்ற கலய நாயனார், சிவலிங்கத்தை நேர்நிமிர்த்தும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் போய்ச் சேர்ந்தார். சிவலிங்கத்தை இழுத்து, சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலை கண்டு மனம் வருந்தினார். பெரிய வலிய கயிற்றினை தமது கழுத்தில் கட்டிக் கொண்டு சிவலிங்கத்தினை இழுத்தார். குங்கிலியாரின் அன்பின் இழுப்பிற்கு ஆட்பட்ட சிவபெருமான் நேர் நிமிர்ந்தார். இக்காட்சி இங்கு சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. கைகளைக் கூப்பி, வணங்கிய படி, கழுத்தில் கட்டிய கயிற்றோடு சிவலிங்கத்தைப் பிணைத்து இழுத்தபடி நின்றுள்ளார்.
குறிப்புதவிகள்
குங்கிலியக்கலய நாயனார்
சிற்பம்

குங்கிலியக்கலய நாயனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்