சிற்பம்
இலிங்கோத்பவர்
இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் | இலிங்கோத்பவர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | திருவாலீஸ்வரம் |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | திருநெல்வேலி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
விளக்கம்
பிளந்துள்ள இலிங்கத்தின் நடுவில் இருந்து அடி முடி காணவியலா அண்ணாமலையாய் விளங்கும் இலிங்கோத்பவர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இலிங்கோத்பவர் படிமம் சிவலிங்கத்துடன் இணைந்து காணப்படுகிறது. சந்திரசேகரமூர்த்தியின் இப்படிமம் இலிங்கத்திலிருந்து வெளிவந்ததாகும். இதனால் இப்படிமம் “இலிங்கோத்பவர்” எனப்படுகிறது. ருத்திரன், சந்திரசேகரர் வடிவில் இலிங்கத்திலிருந்து தோன்றிய வடிவாகையால் இலிங்கோத்பவர் என்றழைக்கப்படுகிறது. இலிங்கபுராணம், கூர்மபுராணம், சுப்ரபேதாகமம், அம்சுமத்பேதாகமம், காரணாகமம் ஆகியவைகளில் இதனைப் பற்றி விளக்கப்பட்டுள்ளன. இலிங்கோத்பவர் படிமம் பாண்டியர் குடவரை திருமெய்யம், பிள்ளையார் பட்டி, மற்றும் பல்லவர்களின் கோயில்கள் காஞ்சி கைலாசநாதர் கோயில், சோழர் கால கோயில்கள், கீழப்பழுவூர், புள்ளமங்கை, திருவாவடுதுறை, ஆடுதுறை, தஞ்சாவூர், திருச்செங்காட்டங்குடி, நாகை, சோழபுரம், தாராசுரம், திருவக்கரை ஆகிய இடங்களில் பல்வேறுபட்ட காலங்களிலும் போற்றப்பட்டு வந்ததுள்ளன. திருவாலீஸ்வரம் கோயிலில் காணப்படும் இலிங்கோத்பவர் பிளந்த இலிங்கத்தின் நடுவில் சமபாதத்தில் நின்றுள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிருகைகள் மான், மழுவினைப் பற்றியுள்ளன. முன் கைகளில் வலது கை அபய முத்திரையையும், இடது கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையையும் கொண்டுள்ளன. ஜடாமகுடராய் விளங்கும் அண்ணாமலையாருக்கு தொடை வரையிலான அரையாடை காணப்படுகிறது. இடைக்கட்டின் ஆடை முடிச்சுகள் தொடையின் பின்புறம் இருபுறமும் நீண்டு தொங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல் மற்றும் காதணி, கழுத்தணி, கையணி ஆகிய இன்ன பிறவணிகளைப் பூண்டுள்ளார். இலிங்கத்தின் இருபுறமும் நான்முகனும் திருமாலும் முன்னிரு கைகளை கூப்பி வணங்கிய படி சமபாதத்தில் நின்றுள்ளனர். நான்முகன் ஜடாமகுடராய், பின்னிரு கைகளில் அக்கமாலை, கெண்டி தாங்கி, பிறவணிகள் துலங்க பீடத்தின் மேல் நிற்கிறார். திருமால் கிரீட மகுடராய், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் தாங்கியபடி பீடத்தின் மீது நின்றுள்ளார். அங்கங்களில் அணிகள் அழகு செய்கின்றன. இருவரும் முழு நீள ஆடை அணிந்துள்ளனர். மும்மூர்த்திகள் ஒரே மாதிரியான உடற்கட்டினையும், இளமைப் பொலிவினையும் பெற்றுள்ளனர். இலிங்கத்தின் கீழே வராகமூர்த்தியாய் பூமியைத் தோண்டுகிறார் திருமால்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
இலிங்கோத்பவர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |