சிற்பம்

துர்க்கை
சிற்பத்தின் பெயர் | துர்க்கை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
வீரமங்கையாய் எட்டுத் திருக்கைகளுடன் விளங்கும் சிம்மவாகினி துர்க்கை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பத்துத்திருக்கைகளுடன் போருக்குப் புறப்படும் நிலையில் உள்ள தேவி பாய்ந்த நிலையில் உள்ள சிம்மத்தின் மேல் இடது காலை வைத்து வலது காலை ஊன்றி ஊர்த்துவ ஜானுவில் திரிபங்க நிலையில் நின்றுள்ளாள். கரண்ட மகுடமணிந்து, நெற்றியில் கண்ணி மாலை சூடியுள்ள துர்க்கை தன் கரங்களில் வாள், கேடயம், அம்பு, வில், நாகம் ஏந்தியுள்ளாள். வீரத்திருமகளான துர்க்கையின் முதுகில் அம்பறாத்தூணி காட்டப்பட்டுள்ளது. முன் கைகளில் வலது முன் கை கடக முத்திரையிலும், வலது பின் கை தொடையில் (ஊரு முத்திரை) வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு வலது கையும் கடகமுத்திரையும், இடது கைகளுள் ஒன்று அச்சுறுத்தும் தர்ஜனி முத்திரையும் காட்டுகின்றன. இடது பின்னங்கை ஒன்றை சிம்மத்தின் தலைமீது ஊன்றியுள்ளார்.அரையாடை அணிந்துள்ள அன்னையின் கால்களில் வீரக்கழல்கள் காட்டப்பட்டுள்ளன. இடையாடை முன்புறம் முழங்கால் வரை வளைந்து தொங்குகின்றது. காதுகளில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பு கச்சை அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும், ஆரமும் அணிந்துள்ளார். பல்லவச்சிற்பியின் கைவண்ணத்தில் எழில் தவழும் முகத்தினைப் பெற்றுள்ள தேவி வீரநங்கையாக நிற்கிறாள். அன்னை நிற்பதற்கு மேலே வலப்புறத்தில் சூலமும், இடது புறத்தில் மழுவும் உள்ளன. இந்த கோட்டத்தின் வலதுபுறம் அமைந்துள்ள சிறு பகுப்புக் கோட்டத்தில் சேட்டை தேவி அமர்ந்துள்ளார். சேட்டை தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். பருத்த வயிறும், பெரிய தனங்களும் கொண்டுள்ள மூத்த தேவி வளத்திற்குரிய கடவுளாக பண்டு வழிபடப்பட்டு வந்தவள். இவளை தூக்கக் கடவுள் என திருக்குறள் குறிப்பிடுகிறது. சேட்டையின் மகன் மாந்தன் வலதுபுறத்தில் நிற்கிறான். இடது புறத்தில் மாந்தி நிற்கிறாள். கணுக்கால் வரையிலான ஆடை அணிந்து, தலையில் மகுடம் சூடி, கழுத்தில் சரப்பளி துலங்க, கைகளில் வளைகள் விளங்க அமர்ந்துள்ளாள். இடதுபுறம் அமைந்துள்ள மற்றொரு சிறு பகுப்புக் கோட்டத்தில் கொற்றவை தாங்கித் தூண்களுடன் அமைந்த தளத்தின் மீது சுகாசனத்தில் வலது காலை மடக்கி இடதுகாலை கீழே பீடத்தின் மீது வைத்தவாறு அமர்ந்துள்ளார். நான்கு கைகளுடன் விளங்கும் அன்னை மூன்று கைகளில் கடக முத்திரையையும் , இடது முன்கையை யோக முத்திரையிலும் வைத்துள்ளார். மார்பில் கச்சை அணிந்துள்ளார். அன்னையின் கைகளில் தோள்வளை, முன்வளைகள் காட்டப்பட்டள்ளன. கழுத்தில் சவடியும், ஆரமும் காட்டப்பட்டுள்ளன. கரண்டமகுடம், கண்ணிமாலை தலையணிகளாக விளங்குகின்றன. அன்னையின் இருபுறமும் மேலே சிம்மத்தலையும் எருமைத் தலையும் காட்டப்பட்டுள்ளன. சேட்டைதேவி கொற்றவை இரு சிற்பங்களின் கீழ் உள்ள பகுப்புகளில் பாய்ந்த நிலையில் சிங்கங்கள் காட்டப்பட்டுள்ளன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |