வரலாற்றுச் சின்னம்

தரங்கம்பாடிக் கோட்டை

தரங்கம்பாடிக் கோட்டை
தொல்லியல் சின்னத்தின் பெயர் தரங்கம்பாடிக் கோட்டை
அமைவிடம் தரங்கம்பாடி
ஊர் தரங்கம்பாடி
வட்டம் பொறையாறு
மாவட்டம் நாகப்பட்டினம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.1620
விளக்கம்
டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மாநில தலைநகரான சென்னையில் இருந்து 283 கிமீ (176 மைல்) தொலைவில் உள்ளது. இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர் கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய கோட்டையின் நீளம் 60 மீ (200 அடி) மற்றும் அகலம் சுமார் 11 மீ (36 அடி). கோட்டை சரிவக வடிவிலும் இடது சிறகில் மூன்று அறைகளுடன் உள்ளது இது ஆளுநர் இல்லமாகும். இடது மூலையில் திறந்த நெருப்பிடம் மற்றும் புகைபோக்கியுடன் சமையலறையும் உள்ளது. கோட்டையின் மையத்தில் தேவாலய அறை உள்ளது இது தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. வலப்பக்க மூலையில் உள்ள அறை வணிக இயக்குநரின் வசிப்பிடமாக இருந்தது. தற்காலத்திலு இது கிடங்காக உள்ளது. கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டவை. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கிலும் ஒரு வாயில் கூடுதலாக உள்ளது. கோட்டையின் இரண்டாவது மாடியில் பாதுகாவலர் அறைகளின் தொகுதிகள் உள்ளன. மாடிப் படிக்கட்டுகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் மைய பகுதியில் நான்கு ஒட்டகத் திமில் வடிவ குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத் தூண்தான் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது. கோட்டையும் அதன் குறிப்பிடத்தக்க கட்டிடங்களின் தொகுப்பும் 1620-ல் கட்டப்பட்டவை. கோட்டையில் உள்ளே உள்ள குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்களுடன் மரக் கதவுகள் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நகரம் போன்ற தோற்றத்தில் உள்ளது, அதாவது, இராச வீதிபோல உள்ளது. இந்த இராச வீதியின் குறிப்பிடத்தக்க கட்டிடங்கள் சில அவை கேட் ஹவுஸ், முகில்ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை போன்றவை ஆகும். இங்கு கடல் நோக்கி கோட்டையின் சுவர்கள் இருந்ததால், இங்கிருந்த உப்புக்காற்றுச் சூழல் கோட்டையை அரித்தது, ஆதலால் அவ்வப்போது சுவர்களை வலுவூட்டவேண்டி இருந்ததால், இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலைத் தாங்க முடியவில்லை, ஆனால் சூறையாடும் குதிரைப்படை தாக்குதல்களில் இருந்து குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பு அளித்தது. கோட்டைச் சுவர்கள் கருங்கல் கொண்டு கட்டப்பட்டன.
பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, பூம்புகார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது தரங்கம்பாடி எனும் மீனவ கிராமம். சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானுறு போன்ற இலக்கியங்கள் இவ்வூரை பொறையாறு என்று குறிப்பிடுகின்றது.. அக்காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்துள்ளது இப்பகுதியை பெரியன்கிழான் என்பவன் ஆண்டு வந்ததாக சொல்லப்படுகின்றது. இவ்வூரில் மாசிலாமணிநாதர் எனும் சிவன் கோயில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது. இங்குள்ள முதலாம் குலசேகரபாண்டியனின் கி.பி. 1305 ம் ஆண்டு கல்வெட்டில், ‘சடங்கன்பாடியான குலசேரன் பட்டினத்து உடையார் மணிவண்ணீசுரமுடையார்க்கு’ என்றுள்ளது. அதுபோல, சடங்கன்பாடி என்ற பெயரே மருவி பின்னர் தரங்கம்பாடி என அழைக்கப்பட்டுள்ளது.. தரங்கம்பாடி என்றால் ‘அலைகள் கவி பாடும் இடம்’ என்பதாகும். பாரம்பரிய வணிக துறைமுக நகரமான தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டினர் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு அப்போது தஞ்சையை ஆண்டு வந்த இரகுநாத நாயக்கரை அணுகினர். அவர்தம் ஆணைக்கினைங்கி 1620 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கப்பல் தளபதி ஒவ்கிட்டே என்பவர் மன்னரோடு ஆண்டுக்கு ரூ. 3111 குத்தகை என்ற அடிப்படையில் ஒப்பந்தம் பண்ணிக் கொண்டு டேன்ஸ்பர்க் என்ற இக் கோட்டையைக் கட்டினார். இதற்கான ஒப்பந்த ஆணை தங்க இலையில் தமிழில் எழுதப்பட்டு இரகுநாத நாயக்கரால் தெலுங்கில் கையப்பம் இடப்பட்ட்து. அது தற்சமயம் கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரசு காப்பகத்தில் இந்தக் கையெழுத்துப் பிரதி காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த கோட்டை 200 அடி நீளம் மற்றும் 36 அடி அகலம் என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இக் கோட்டையின் முதன்மை வாயில் வடக்கில் உள்ளது. இக் கோட்டையின் கீழ் தளத்தில் கிழக்கு – மேற்காக மூன்று அறைகளும், வடக்கு –தெற்காக நான்கு அறைகளும் உள்ளன. இவ்வறைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்களைப் பாதுகாக்கும் கிடங்குகளாகவும், வீர்ர்கள் ஓய்வெடுக்கவும், முதல் தளம் கவர்னர் மற்றும் மத குருமார் தங்குவதற்கேற்ப நிர்மாணிக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி அகழி எழுப்பப்பட்டு பாலங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் எதிரிகளைத் தாக்குவதற்காக பீரங்கிகளும் நிறுவப்பட்டன.. இக்கோட்டை டேனிஷ் கட்டிடக்கலைப் பாணியில் பெரிய அரங்குகள், உயர் கூரைகள், வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. டேனிஷ் கார்ர்கள் வடிவமைத்த கட்டிட வரைபடத்தை தமிழக கட்டுமான கலைஞர்களும், தொழிலாளிகளும் சேர்ந்து கட்டுவித்தனர் இக் கோட்டையில் முன்பு தேவாலயமாக பயன்படுத்தப்பட்ட இடம் தற்போது அரசு அருங்காட்சியமாக செயல்படுகின்றது. இக் கோட்டைக்கு அருகே கி.பி 1701 ம் ஆண்டில் சீயோன் தேவாலயம், கி.பி. 1718 ம் ஆண்டில் ஜெருசலேம் தேவாலயம், கி.பி. 1784 ம் ஆண்டில் ஆளுநர் பங்களா, ஏழாம் கிருஷ்டியானின் ஆட்சி காலத்தில் கி.பி. 1792ல் கோட்டை நுழைவாயில் கட்டப்பட்டது. அதுபோல 17 மற்றும் 18 ம் நூற்றாண்டில் எழுப்ப்ப்பட்ட கல்லறைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பத்தலோமயுஸ் சீகன்பால்க் மற்றும் கென்றிச் புளுட்டாச்சோ ஆகியோர் டென்மார்க் அரசரின் உத்தரவின் பேரில் கி.பி. 1705 ஆம் ஆண்டு மதப்பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்திய மொழியில் முதன் முதலாக விவிலியம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சுருவாக்கம் செய்து தரங்கம்பாடியில் சீகன் பால்க் தான் கி.பி. 1714ல் வெளியிட்டார். தரங்கம்பாடி கி.பி 1845 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. அதன் பிறகு இந்த கோட்டை தன் பொலிவை இழந்தது.
குறிப்புதவிகள்
தரங்கம்பாடிக் கோட்டை
வரலாற்றுச் சின்னம்

தரங்கம்பாடிக் கோட்டை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    17 Files

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

  • TVA_MON_00001_தரங்கம்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Apr 2017
பார்வைகள் 456
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்