புராண ஓவியங்கள் மற்றும் அலங்கார வரைவுகள்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | திருவலஞ்சுழி |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஓவியத்தின் பெயர் | புராண ஓவியங்கள் மற்றும் அலங்கார வரைவுகள் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | சுவரோவியம் |
|
விளக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஊர் திருவலஞ்சுழி. இவ்வூரில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் கோயில் ஒரு பழமையான வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் வளாகத்தில் நீண்ட பிராகாரங்கள், மண்டபங்கள், சன்னதிகள் என பல்வேறு கட்டுமானங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள சிவன் கோயில் முக மண்டபத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் இயற்பகை நாயனார் கதை, கிராதர்ஜுனியம், கஜேந்திரமோட்சம், இரதி-மன்மதன் கதை, சூரியன், இராசி மண்டலம் போன்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் காலவெளியில் சிதைந்து விட்டது. இதைத் தொடர்ந்து இங்கு பெரிய நாயகி அம்மனுக்குத் தனிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயில் சுற்று மண்டபத்தின் கூரைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் அலங்கார வண்ண ஓவியங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அது போல காவேரி புராணக் கதை மிக நீளமாக வரையப்பட்டுள்ளது. இதில் அகத்திய மாமுனி கமண்டலத்துடன் அமர்ந்துள்ளார். அருகில் சமுத்திரராசன் வணங்கிய நிலையில் உள்ளார். அங்கு வந்த காகம் ஒன்று கலசத்தினைத் தட்டி விட நீர் காவேரியாக உருவெடுத்து ஓடுகின்றது. காவேரி ஆற்றின் இருமருங்கிலும் உள்ள கோயில்கள் சிறிய அளவில் குறியீடுகள் போல காட்டப்பட்டுள்ளன. மேலும் காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறு அதற்கு மத்தியில் உள்ள திருவரங்கம் மற்றும் திருவானைக்காவல் போன்ற கோயில்கள் காட்டப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து காவிரி ஐந்து ஆறுகளாய் பிரிந்து, பின்னர் காவேரிபூம்பட்டினத்தில் சேரும் வரையிலான காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் பட்டீஸ்வரம், திருவெள்ளறை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஓவியங்களுக்கு ஒத்தத் தன்மையில் காணப்படுகின்றன. இவை பிற்கால விஜயநகர ஓவியப்பாணியின் தொடர்ச்சியாக காணலாம். மேலும் இந்த ஓவியங்களை 16 -17 ம் நூற்றாண்டுகளில் வரைந்திருக்க வாய்ப்புண்டு. காவிரியாறு கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உருவாகி தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் வழியாக சுமார் 800 கிமீ. பயணித்து பூம்புகாரில் வங்கக் கடலுடன் கலக்கின்றது. இந்த ஆற்று வழித்தடத்தின் இருமருங்கிலும் நூற்றுக்கணக்கான சைவ மற்றும் வைணவ கோயில்கள் உள்ளன. இப்புராணத்திற்கான ஓவியத்தை வடிவமைத்த ஓவியன் பறவையின் பார்வை போல கட்டமைத்துள்ளார். ஆறு துவங்கும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரையிலானப் பகுதிகளில் உள்ள கோயில்களைக் குறியீடுகள் போல எளிமைப் படுத்தி வரைந்துள்ளனர். இங்கு சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது போல, அம்மன் சன்னதியின் கருவறைக்கு பின் உள்ள சுவரில் பிற்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் பெண் கடவுள்களின் உருவங்கள், சாமரம் வீசும் பெண்கள், வீணை மீட்டும் பெண்கள், கிளியுடன் கூடிய பெண்கள் என உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் காவிரி புராண ஓவியத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் வண்ணங்களால் காணப்படுகின்றன. இங்கு சிவப்பு, கருப்பு, மஞ்சள் நிறத்துடம் பச்சை மற்றும் நீல நிறங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மராத்திய ஓவியப்பாணியை ஒத்தத் தன்மையில் இருக்கின்றன. இயற்கை சீற்றம் மற்றும் பிற காரணங்களால் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
16 Files
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
-
TVA_PNT_00052_திருவலஞ...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Nov 2017 |
| பார்வைகள் | 68 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 3 |