சமண ஓவியங்கள்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | ஆர்மாமலை - மலையம்பட்டு |
| வட்டம் | ஆம்பூர் |
| மாவட்டம் | வேலூர் |
| ஓவியத்தின் பெயர் | சமண ஓவியங்கள் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | சுவரோவியம் |
|
விளக்கம்
ஆர்மாமலையில் இயற்கையாய் அமைந்துள்ள குகை ஒன்றின் கூரை மற்றும் சுவர்ப்பகுதியில் சிதிலமுற்ற வண்ண ஓவியங்கள் 1960 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இம்மலை அடிவாரத்தில் சில புதிய கற்காலக் கருவிகளும், சங்ககாலத்தச் சேர்ந்த கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த குகைத் தளத்தில் சமணத் துறவிகள் தங்குவதற்கும், வழிபாட்டிற்காகவும் மண்ணால் கட்டிடம் எழுப்பியுள்ளனர். பெரியார்கள் தங்கியிருந்து இருக்கிறார்கள். தங்கியதோடன்றி மண்ணால் கட்டிடங்கள் எழுப்பி, தங்குவதற்கும், வழிபாட்டிற்கும் வகை செய்து கொண்டிருந்தனர். மேலும் இரண்டு துவாரபாலகர் சிலைகளும், தாமரை மலர் போன்ற பீடமும் காணப்படுகின்றது. இக்கல்லில் கி.பி. 8-ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்களில் 'கடைக்கோட்டு ருத்த நந்தி படாரர் மாணாக்கர் என்று எழுதியுள்ளது. கடைக்கோட்டு ருந்த நந்தி படாரர் என்ற சமண துறவியார் இங்கு வாழ்ந்துள்ளார் என்று தெரியவருகிறது. இவர் காலத்தில் இங்குள்ள ஒவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஓவியங்கள் சமண சமயத் தொடர்பானதாக அடையாளப்படுத்துகின்றனர். இவ்வோவியங்கள் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இவ்வோவியங்கள் தீட்டும் முன்னர், ஒழுங்கற்ற பாறைகளில் சுண்ணாம்பு பூச்சு கொண்டு வரைவதற்கு ஏற்ற தளம் உருவாக்கி பின் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளது. பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பினும் எஞ்சியுள்ள ஓவியங்கள் வண்ணம் மற்றும் வடிவமைப்பு யுத்திகளில் சித்தன்னவாசல் ஓவியங்களுக்கு ஒத்த தன்மையில் காணப்படுகின்றது. இங்கு சமணத் தொடர்பான காட்சிகளும், எட்டு திசைக் காவலர்களான அக்னி, வாயு, குபேரன், ஈசானியன், இந்திரன், யமன், நிருதி, வருணன் போன்றவர்களும் தாமரை தடாகமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் ஆட்டின் மீது பயணிக்கும் இருவருடைய ஓவியமே தெளிவாக உள்ளது. பச்சை, மஞ்சள், கருஞ்சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே பிரதானமாக உள்ளது. உருவங்கள் கருஞ்சிவப்பு வண்ணத்தால் கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆபரணங்கள் குறைந்த அளவாகவும் அதே வேளை நுண்ணிய வேலைப்பாட்டுடனும் காணப்படுகின்றது. ஆர்மாமலைப்பகுதி பல்லவர்களின் இறுதிகாலகட்டங்களில் இராஷ்டிரகூடர், கங்கர் ஆய அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டு சில காலங்கள் இருந்தன. இருப்பினும் இவை பல்லவர்கள் காலத்தின் இறுதிப்பகுதியில் சுமார் 8 -9ம் நூற்றாண்டுகளில் வரைந்திருக்க்கூடும் என கருதப்படுகிறது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
இந்திய ஓவியக்கலை மரபில் உன்னத நிலையை அடைந்த ஓவியங்களை வட இந்தியாவில் அஜந்தா, எல்லோரா போன்ற குகைகளில் காணமுடிகின்றது. தமிழகத்தில் இதே போன்ற ஓவிய மரபு பிற்காலங்களில் வந்த பல்லவர், பாண்டியர் மற்றும் சோழர்கள் காலங்களில் இருந்துள்ளது. இவை எண்ணிக்கையில் மிக குறைவு. இம்மரபில் வந்த ஓவியத்தின் மிச்சமான ஒன்று தான் ஆர்மாமலையில் உள்ள ஓவியங்கள். மேலும், இங்குள்ள ஓவியங்களில் பெரும்பான்மை அழிந்த நிலையில் இருப்பதனால் ஓவியங்கள் குறித்து முழுமையாக அறிய இயல முடியவில்லை. அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பினும் வடிவமைப்பு மற்றும் அழகியில் செய்நேர்த்தியில் இங்குள்ள ஓவியங்கள் மிக முக்கியாமான கலை வரலாற்றுத்தலமாக கருதப்படுகிறது. |
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 25 May 2017 |
| பார்வைகள் | 95 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 3 |