சிற்பம்
அம்பிகா இயக்கி
அம்பிகா இயக்கி
சிற்பத்தின் பெயர் | அம்பிகா இயக்கி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | சிதரால் |
ஊர் | சிதரால் |
வட்டம் | தோவாளை |
மாவட்டம் | கன்னியாகுமரி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
சமண சமயத்தின் பெண் தெய்வங்களுள் ஒருவரான அம்பிகா இயக்கி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அம்பிகா இயக்கி தருமதேவி ஆவார். கூஷ்மாண்டி - 21-வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். சோமசர்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அக்னிலா. அவன் ஒரு நாள் தன் மனைவியை சமையல் செய்யச் சொல்லிவிட்டு, சில பிராமணர்களை விருந்துண்ண அழைத்திருந்தான். விருந்துண்போர் வருவதற்கு முன்பாக, இரு சமண முனிவர்கள் அந்தப் பக்கம் வந்தனர். அக்னிலா, அந்த இருவருக்கும் உணவு பரிமாற விரும்பினாள். வேண்டிய அளவு உணவு இருந்த காரணத்தால் சமணர்களை அழைத்து, வணங்கி, அவர்களுக்கு உணவையும் பரிமாறினாள். தனது விருந்தினர்கள் இவ்வாறு அவமதிக்கப்பட்டதை எண்ணிக் கடுங்கோபம் அடைந்த சோமசர்மன், தன் மனைவி அக்னிலாவையும் அவளது மகன்களையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான். சிறிது காலம் கழித்து சோமசர்மன் அவளை அழைத்து வர கானகம் சென்றான். காட்டில் இருந்த அக்னிலா தூரத்தில் தன் கணவன் சோமசர்மன் வருவதைப் பார்த்தாள். அவன் தன்னைத் தாக்கத்தான் வருகிறான் என்று எண்ணிய அக்னிலா, பயந்துபோய், மலை முகட்டிலிருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள். அவளது நல்வினைகளால் அவள் ஒரு யக்ஷியாகப் பிறந்தாள். அந்த யக்ஷிதான் அம்பிகா. சமணத் துறவிக்காற்றிய தொண்டினை மெச்சி , மேலுலகத்தில் ‘யக்ஷி’* என்ற தெய்வ நிலையை அடைகிறாள் அம்பிகா தேவி. தீர்த்தங்கரர்களுக்கு பணிசெய்வது யக்ஷிகளின் வேலை. ‘யக்ஷி’ அம்பிகா 22 -ஆம் தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு பணிவிடைகள் செய்கிறாள். மேலும் நேமிநாதரின் சாசன யக்ஷியான ஸ்ரீதர்மதேவி தனது முற்பிறவியில் சமண முனிவருக்கு பணிவிடைகள் செய்து ஆகாரமளித்ததின் காரணமாக கணவனால் வஞ்சிக்கப்பட்டு தனியே பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள் என்றும், இறந்த பின்னர் அடுத்த பிறவியில் தர்மதேவி யக்ஷியாக பிறந்து திருமலையில் தனது குழந்தைகள் மற்றும் பணிப்பெண்ணுடன் வாழ்ந்து வந்தாள் எனவும் வரலாறு பகர்கின்றது. மேலும் அவள் முற்பிறவிக்கணவன் யக்ஷியான செய்தியறியாமல் அவளை நெருங்கவும், அவள் தான் தற்போது யக்ஷியானதைச் சொல்லி தனது சொரூபத்தை காட்டியதும், அதன் ஒளியைக்கண்டு மயங்கி மடிந்ததும்; பின்னர் அவன் சிங்க வாகனமாக மாறியதன் வரலாற்றை சித்தரிக்கும் தத்ரூபமான சிற்பத்தொகுப்பு ஆனை மலையில் அமைந்துள்ளது. அம்பிகா இயக்கியின் மிகவும் எழிலார்ந்த சிற்பம் சிதராலில் அமைந்துள்ளது. அம்பிகா இடது காலை ஊன்றி, வலது காலை தளர்வாக வைத்து வைஷ்ணவ நிலையில் நிற்கிறாள். இடது கை எழில் தளிர்க்கையாக நீண்டுள்ளது. வலது கையை இடையில் வைத்துள்ளாள். தலையில் கரண்ட மகுடம் எழில் சேர்க்கிறது. நெற்றிப்பட்டை, நீள்காதுகளில் குதம்பை, கழுத்தில் சரப்பளி, கைகளில் முன்வளை, இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய கணுக்கால் வரையிலான ஆடை, கால் பாதங்களில் சதங்கை ஆகியன கொண்டுள்ளார். அம்பிகாவின் இடது புறம் அவளின் இரு மகன்கள் சிறுவர்களாக நிற்கின்றனர். வலதுபுறம் பானையை இடது கையில் தூக்கி பிடித்தவாறு பெண் ஒருத்தி நிற்கிறாள். அம்பிகாவின் பின்புறம் அவளின் வாகனமான சிங்கம் காட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அம்பிகா இயக்கி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |