கல்வெட்டு
புகளுர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | புகளுர் |
|---|---|
| ஊர் | புகளுர் / வேலாயுதம்பாளையம் |
| வட்டம் | குளித்தலை |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | ஆறுநாட்டார்மலை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
ஆறுநாட்டார் மலையில் வடபுறமுள்ள சூளாமணி எனப்படும் குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கையில் இக்கல்வெட்டுள்ளது. நாகன் மகன் பெருங்கீரன் என்பவனது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ‘பெரு’ என்ற இடத்தில் ஒரு கோடு செதுக்கப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டினைக் கருத்தில் கொண்டால் ‘ளங்கீரன்’ என்ற பெயராகப் பொருள்படும். புகளூர்க் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. அதிக அளவில் தமிழ்பிராமி கல்வெட்டுகள் உள்ள இடங்களில் ஒன்று புகளூர். இங்கு 12தமிழ்-பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இன்றைய கரூர் பண்டைய கருவூர் - வஞ்சி என்ற சேரர் தலைநகராக இருந்தது என்பதை அறிய இக்கல்வெட்டுகள் சேரமரபினர் பெயர்களுடனும், கருஊர் என்ற இடப்பெயர்க் குறிப்புடனும் விளங்குகின்றன. முதலிரு கல்வெட்டுகள் ஒன்று போலவே உள்ளன. இரண்டாவது கல்வெட்டு குகைத்தளத்தின் நீர் வடிவிளிம்பினை சற்று உயர்த்தி மீண்டும் வெட்டியமையால் வெட்டப்பட்டதாக இருக்கவேண்டும். இக்கல்வெட்டுகளில் இளங்கோ ஆக, ளங்கோ ஆகி என்று இருவகையாக கால உணர்த்துதல் இருப்பதால் இளங்கோ (இளவரசன்) ஆக வேண்டுமென்பதற்காக, இளங்கோ (இளவரசன்) ஆனபின் கல்லை அறுப்பித்துக் கொடுத்தான் என்று இரு நிகழ்வுகளை உணரலாம். அறுத்த - அறுபித என்ற சொற்கள் ‘தானே செய்த’, ‘பிறரைக் கொண்டு செய்த’ என்ற இரு பொருள்படுகின்றன. இக்கல்வெட்டுகள் பிற்காலத் தமிழ்-பிராமி என்ற இரண்டாம் நிலையில் கொள்ளப்படுகின்றன. ஒரே நீண்டவரியாக பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் இங்கு இரண்டு முதல் ஐந்து வரிகளாக மடித்து பொறிக்கப்பட்டமையைக் காணலாம். மெய்யெழுத்துக்குப் புள்ளியிடும் மரபு இங்கு தெரியவருகிறது. இங்கு கொடுக்கப்பட்ட கொடைகள் அறுபிதகல், அதிட்டானம், முன்று, பள்ளி என்ற வகையின. இவை முறையே குகைத்தளம் அல்லது நீர்வடி விளிம்பு, (கல்) அமைத்தல், முனிவர்களுக்கு புனித இருக்கை (அதிட்டானம்) அமைத்தல், முற்றம் (முன்று) அமைத்தல், புனித இருப்பிடம் அல்லது கற்படுக்கை (பள்ளி) அமைத்தல் என்று பொருள்படுகின்றன. மூன்று கல்வெட்டுகள் ‘யாற்றுார் செங்காயபன்' என்பவருக்கு கொடை தரப்பட்டதைக் குறிக்கின்றன. ஆத்தூர் என்றொரு ஊர் புகளூர் பகுதியில் இன்றுமுள்ளது. செங்காயபன் மூதா அமண்ணன் என்பவர் முதிய அல்லது மூத்த துறவியாகச் சொல்லப்படுகிறார். இவர் சமண முனிவர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து, பெளத்த முனிவர் என்றும் சிலர் கருதுவர். சேர மன்னர்களின் மூன்று தலைமுறையினர் இங்கு சொல்லப்படுகின்றனர். கோ ஆதன் செல்லிரும்பொறை ஆட்சி செய்கின்ற அரசனாக இருந்ததால் கோ என்ற சொல் அரசன் என்று குறிக்கும் வண்ணம் பெயர் முன்னதாக உள்ளது. இவனது மகன் பெருங்கடுங்கோ மூத்த இளவரசனாக இருக்க, பேரன் இளைய இளவரசனாகப் பட்டம் பெரும் நிகழ்வை இக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இம்மூவரும் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தின் 7,8,9வது பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்களாவர். இங்கு இளவரசனாகக் காணப்படும் பெருங்கடுங்கோ அரசனானதும் பெருஞ்சேரல் எனப்பெயர் பெற்றுள்ளான் என்பதை பதிற்றுப்பத்து மூலம் ஊகிக்கலாம். அதேபோல இளங்கடுங்கோ இளஞ்சேரல் இருப்பொறை என்ற பெயருடன் பின்னர் அரசனாகியிருக்கலாம். இதனை 9 வது பத்து காட்டுகிறது. இக்கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்படும் கோஆதன் செல்லிரும்பொறை 7வது பத்தில் செல்வக் கடுங்கோவாழியாதன் என்று சொல்லப்பட்டுள்ளான். புகளூர் கல்வெட்டுகளில் கீரன் கொற்றி என்பவள் கொடையாளியாக இருகல்வெட்டுகளில் காணப்படுகிறாள். இவள் பிட்டன் அல்லது பிட்டந்தையின் இளைய மகளாகக் குறிக்கப்படுகிறாள். மற்றொரு கல்வெட்டில் கொற்றந்தை குறிக்கப்படுகிறான். பிட்டந்தை, கொற்றந்தை எனப் பிட்டனும், கொற்றனும் அந்தை என்று மரியாதைச் சொல்லுடன் குறிக்கப்பட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் சேரரது படைத் தலைவராக இவர்கள் காணப்படுவது இங்கு நோக்கத்தக்கதாகும். கல்வெட்டுகளில் குறிக்கப்படும் யாற்றுார் இன்று புகளூருக்கு அருகில் உள்ள ஆத்தூர் என்றும் நல்லியூர் இன்று புகளூருக்கு அருகில் உள்ள நன்னியூர் என்றும் கருதலாம். புகளூர் கல்வெட்டில் கருஊரைச் சேர்ந்த பொன் வாணிகன் கொடை கொடுத்துள்ளான். அதேபோல எண்ணை வாணிகனும் கொடை கொடுத்துள்ளான். அரசியல், சமயம், வணிகம் தொடர்பான தொன்மையான செய்திகளைப் புகளூர் கல்வெட்டுகள் கொண்டுள்ளன. சிறப்புமிக்க இக்கல்வெட்டுகளும், குகைத்தளங்களும் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையால் மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 222 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 5 |