கல்வெட்டு
ஐயர் மலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | ஐயர் மலை |
|---|---|
| ஊர் | ஐயர் மலை |
| வட்டம் | குளித்தலை |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தினைச் சேர்ந்த ஐயர் மலை எனும் சிற்றூர் உள்ளது. இங்குள்ள இரத்தினகிரீஸ்வரர் மலையின் உயரே அமைந்த இயற்கைக் குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழ்-பிராமி கல்வெட்டு காணப்படுகிறது. மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் படத்துடனும், இந்திய தொல்லியல் மறுபார்வையில் செய்தியாகவும் 1973-74இல் இது வெளியிடப்பட்டது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். பனைதுறை என்ற இடத்தினைச் சேர்ந்த வெஸன் என்பவனால் செய்தளிக்கப்பட்ட இருக்கை என்பது இதன் பொருள். கல்வெட்டு பொறித்தவர் ‘றை’ என்ற எழுத்தை முதலில் வெட்டாது தவறுதலாக விட்டுவிட்டுப் பின்னர் இடைவெளியில் சிறிய எழுத்தாகச் சேர்த்துள்ளார். பாடபேதம் இல்லை. இக்கல்வெட்டில் உள்ள மூன்று சொற்களில் முதல் சொல்லின் பனைதுறை என்பதே தமிழ்ச்சொல். பிற இரண்டும் பிராகிரதச் சொற்களாகும். பனை என்ற மரப்பெயரும், நீர்நிலை என்ற பொருளுடைய துறை என்ற சொல்லும் இணைந்த இடப்பெயர் இது. பொதுவாக ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளையொட்டி மக்களால் பயன்படுத்தப்படும் இடமாக இருப்பின் அது துறை என்று பெயர் பெறும். பனை மரங்கள் நிறைந்தும் அத்துறைப் பகுதி இருக்க வேண்டும். அவ்வகையில் பாலை அல்லது நெய்தல் சார்ந்த முறையே கழி அல்லது கடல் சார்ந்த துறையாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இவ்வூரில் அத்தகைய நில அமைப்பு இல்லை. இருப்பினும் காவிரி ஆறு வெகு தொலைவில் இல்லாத நிலையிலும், சேரர் பகுதிக்கு மிக அணித்தாக இருக்கும் நிலையிலும், சேர மரபினரின் அடையாளமான 'பனை’ என்ற பெயரும் காவிரித்துறையும் பின்புலமாகி இப்பெயர் வழங்கக் காரணம் ஆகலாம். சேரநாட்டு எடக்கல் கல்வெட்டில் பனைமரம் என்று கருதத்தக்க மூன்று கவருடைய மரக்கிளை போன்ற பொறிப்பு கல்வெட்டின் இறுதியில் இடம்பெற்றுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது. வெஸன் என்பதற்கு ‘வெஸ்ஸ‘ என்ற சொல்லடியிற் பிறந்த வைஸ்ய என்பதை அடிப்படையாகக் கொண்டு வணிகன் என்ற பொருள் கொள்ளலாம். அல்லது 'விஸ்ஸ’ என்று சொல்லடியிற் பிறந்த 'வைஸ்வ’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, உத்திராட நாளிற் பிறந்ததனால் அப்பெயர் பெற்றவன் என்றும் பொருள் கொள்ளலாம். சமண சமயம் பெரிதும் வணிகர்களால் ஆதரிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, இவ்விரண்டில் முதலில் குறித்த வணிகன் என்ற பொருளையே ஏற்கலாம். அதட்அனம் என்பது நிலையான இருக்கை என்று பொருள்படும். அதிட்டானம் என்ற பிராகிருதச் சொல்லின் திரிபு வடிவம் இது. டகரம் இரட்டாதும், தகரத்தில் இகரம் ஏற்றாதும் எழுதப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் கல்வெட்டில் டகரம் மட்டும் இரட்டாத அதிட்அனம் என்ற சொல்லாலும், புகளூர் கல்வெட்டில் 'அதிட்டானம்' என்ற சரியான சொல் வடிவமும் இடம்பெற்றுள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 230 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |