கல்கி என்று அழைக்கப்படும் ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். கல்கி வார இதழை நிறுவியவர். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று நாவல்களை எழுதி புகழ் பெற்றவர்.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த புத்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் முடித்த பின்னர், மாயூரம் முனிசிபல் உயர்நிலைப்.... மேலும் பார்க்க
கல்கி என்று அழைக்கப்படும் ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். கல்கி வார இதழை நிறுவியவர். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று நாவல்களை எழுதி புகழ் பெற்றவர்.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த புத்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் முடித்த பின்னர், மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இளமையிலேயே தேசிய இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டமையால் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.
சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி, நீண்ட காலம் அரசியல் பயணம் செய்தவர் கல்கி. 1921-ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கப்பட்டபோது, மகாத்மா காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். விடுதலையானதும் அப்போது திருச்சியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகத்தில் வேலையில் சேர்ந்தார். அதன் பின்னர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். 1923-ல் திரு.வி. கல்யாணசுந்தரனார் நடத்தி வந்த நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
கல்கி 1924-ல் ருக்மணி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், ஆனந்தி என்ற மகனும் பிறந்தனர்.
1925 ஆம் ஆண்டு ராஜாஜி திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமத்தை தொடங்கி அங்கிருந்து விமோசனம் என்னும் இதழையும் வெளியிடத் தொடங்கினார். முதன்மையாக குடிப்பழக்கத்துக்கு எதிராகப் பேசிய இதழ் இது. கல்கி திருச்செங்கோடு சென்று ராஜாஜியுடன் தங்கி விமோசனம் இதழை பொறுப்பேற்று நடத்தினார்.
கல்கி தன் அரசியல் வழிகாட்டியாக ராஜாஜியை ஏற்றுக் கொண்டவர். ராஜாஜியின் அரசியலை தானும் மேற்கொண்டு இறுதிவரை உடனிருந்தார். ராஜாஜியின் போர்வாள் என அறியப்பட்டார். 1930-ல் ராஜாஜி ஒருங்கிணைத்த உப்பு சத்தியாக்கிரகத்திலும் கலந்துக் கொண்டு உப்பு காய்ச்சி சட்டத்தை மீறி சிறை சென்றார். ஆறுமாதம் சிறையில் இருந்தார்.
1931-ல் எஸ்.எஸ். வாசன் தொடங்கி நடத்திய ஆனந்த விகடன் இதழில் துணை ஆசிரியரானார். ஆனந்த விகடனை வெற்றிகரமான பொதுவாசிப்புக்குரிய இதழாக ஆக்கியவர் கல்கி. தமிழில் பொழுதுபோக்கு வாசிப்பை ஓர் இயக்கமாக ஆக்கி அதில் திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம் என பல களங்களில் பல கட்டுரைகளை எழுதினார்.
1940-ல் காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தபோது ஆனந்த விகடனில் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு அப்போராட்டத்தில் ஈடுபட்டார். மூன்றுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். பின்னர் எஸ்.எஸ். வாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆனந்த விகடனில் இருந்து விலகி 1941-ல் கல்கி இதழை தன் நண்பர் கல்கி சதாசிவம் உதவியுடன் நிறுவினார். கல்கி இதழுக்கு ராஜாஜியின் வாழ்த்தும் கிடைத்தது.
கல்கியில் அவர் தன் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவலான பார்த்திபன் கனவை எழுதினார். கல்கியில் அவர் எழுதிய வரலாற்றுத் தொடர்கதைகளால் அது மிக வெற்றிகரமான இதழாக மாறியது. அதன்பின் புகழ்பெற்ற சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்களை கல்கி இதழில் தொடராக எழுதினார்.
பொதுவாசகர்களுக்கு உகந்த வேடிக்கையும் நையாண்டியும் கொண்ட எளிமையான நடையை வளர்த்தெடுத்தார். அவரைப் போலவே எழுதும் தேவன், துமிலன், மாயாவி, ஆர்வி போன்ற எழுத்தாளர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினார். கல்கி இதழில் தன்னுடைய எழுத்து முறையைச் சாராத எழுத்தாளர்களின் வரிசை ஒன்றையும் கல்கி உருவாக்கினார். மாயாவி, விந்தன், நா. பார்த்தசாரதி, ர.சு.நல்லபெருமாள் போன்றவர்களும் கல்கி மூலமாக உருவானவர்களே. தமிழ் இதழியலிலும் தமிழ் வணிகக் கேளிக்கை புனைவெழுத்திலும் கல்கியே முதன்மைச் சாதனையாளரும் முன்னோடியுமாவார்.
கல்கிக்கு இதழியல் சார்ந்த எழுத்தில் முன்னோடியாக கூறத்தக்கவர் வ.ரா. என்று அழைக்கப்பட்ட வ.ராமசாமி ஐயங்கார். வ.ரா எழுதிய நடைச்சித்திரம் என்னும் எழுத்து முறையின் சாயலை கல்கியின் பல படைப்புகளில் காணலாம். மகாகவி பாரதியாரின் உரைநடையின் தொடர்ச்சி என்று கல்கியின் எழுத்துக்களை கூர்ந்து நோக்கியவர்கள் வரையறை செய்துள்ளனர்.
தனது இறுதிக்காலம் வரை கல்கி இதழை தொடங்கி நடத்தினார். அவரது மகன் கி. ராஜேந்திரன், தனது தந்தையின் மறைவுக்குப் பின் கல்கி இதழின் ஆசிரியராக இருந்தார். கல்கி ராஜேந்திரனும், மகள் ஆனந்தியும் எழுத்தாளர்கள். கல்கி எழுதி முடிக்காமல் விட்ட அமரதாரா நாவலை அவர் மறைவுக்குப் பின் ஆனந்தி எழுதி முடித்தார்.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஒசை போன்ற நாவல்கள் ஆங்கிலத்தில் பலரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற படைப்புகள் பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளன. கல்கி எழுதிய ‘அலை ஓசை’ நாவலுக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த நாவலுக்கான விருது கிடைத்தது.
காந்தியின் ஹரிஜன இயக்கம், ஆலயப் பிரவேச இயக்கம் ஆகியவற்றை ஆதரித்து அன்றைய வைதிகர்களிடம் கருத்துப்போர் செய்தார். 1939-ல் மகாத்மா காந்தி ஆலய நுழைவுப் போராட்டம் அறிவித்தபோது, காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்கு கல்கி, 'நீங்கள் ஒரு சாதியின் தலைவர்தான், ஜகத்குருவெல்லாம் அல்ல' என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய அந்த கருத்து பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழிசை இயக்கத்தை நிலைநாட்டியதில் கல்கியின் எழுத்துக்கள் முக்கியமானவை. தமிழிசை இயக்கத்தின் முதன்மையான பிரச்சாரகர்களில் கல்கியும் ஒருவர். தெலுங்கு கீர்த்தனங்கள் மட்டுமே பாடப்பட்டு வந்த சபாக் கச்சேரிகளில், தமிழிசையும் பாடப்பட வேண்டும் என்று முன்னெடுத்தவர்களில் கல்கியும் ஒருவர். தமிழிசை இயக்கத்தை ஆதரித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். கர்நாடகம் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய இசை விமர்சனக் கட்டுரைகள் புகழ்பெற்றவை. 1941-ம் ஆண்டு சென்னையில் ராஜா அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் நடந்த முதலாவது தமிழிசை மாநாட்டில் கலந்துக் கொண்டார். இராஜாஜி, ரசிகமணி டி.கே.சி., கல்கி சதாசிவம், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் கல்கியின் தமிழிசை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர்கள்.
1945-ல் தமிழிசை மாநாட்டுக்காக கல்கி எட்டையபுரம் சென்றபோது, அவ்விழாவில் பாரதிக்கு எட்டையபுரத்தில் ஒரு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான பொறுப்பை தான் ஏற்பதாக அறிவித்த கல்கி, தன் இதழில் அதற்கான நிதி வேண்டிய கோரிக்கையையும் விடுத்தார். அக்டோபர் 13, 1947-ல் மணிமண்டபம் ராஜஜியால் திறந்து வைக்கப்பட்டது. பாரதியின் துணைவி செல்லம்மா பாரதிக்காக நிதி திரட்டி ஒரு வைப்பு நிதியையும் உருவாக்கி அளித்தார்.
1936-ல் இந்தியாவின் மகாகவிகளின் பட்டியலில் சுப்பிரமணிய பாரதியார் வரமாட்டார் என்று கல்கி கருத்து தெரிவித்திருந்தார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. பாரதி அபிமானியான கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள், கல்கியின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். பரபரப்பை உண்டாக்கிய இது பாரதி மகாகவி விவாதம் என அப்போது அழைக்கப்பட்டது. இக்கட்டுரைகளை 1936-ல் ’கண்ணன் என் கவி’ என்ற பெயரில் கு.ப. ராஜகோபாலன் தொகுத்து வெளியிட்டார்.
இதேபோன்று கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவரான புதுமைப்பித்தன் 1948-ல் மறைந்தபின், வறுமையில் வாடிய அவருடைய மனைவி கமலாவையும் மகளையும் காப்பாற்றுவதற்காக கல்கி நிதி திரட்டினார். குறிப்பிடத்தக்க ஒரு தொகை புதுமைப்பித்தன் மனைவியிடம் அளிக்கப்பட்டது.
கல்கியின் எழுத்துக்கள் ஆங்கில நாவலாசிரியர்கள் வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரின் நாவல்களை தழுவி எழுதப்பட்டவை என்று 1937-ல் புதுமைப்பித்தன் குற்றம் சாட்டினார். அதற்கு கல்கி மறுப்பு தெரிவித்தார். வெவ்வேறு இலக்கியவாதிகளும் அப்போது தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இது கல்கி - புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் என்ற பெயரில் அறியப்பட்டது.
கல்கி எழுதிய தியாகபூமி நாவல் கே. சுப்ரமணியம் இயக்கத்தில் 1939-ல் திரைப்பட எடுக்கப்பட்டது. இது தேச விடுதலையைத் தூண்டுவதாகக் கருதி, ஆங்கிலேய அரசாங்கம் இத்திரைப்படத்திற்கு தடை விதித்தது. கல்கி எழுதிய கள்வனின் காதலி நாவல் அதே பெயரில் வி.எஸ். ராகவன் இயக்கத்தில் 1955-ல் திரைப்படமாக வெளிவந்தது. கல்கி எழுதிய பார்த்திபன் கனவு சரித்திர நாவல் யோகநாத் இயக்கத்தில் 1960-ல் திரைப்படமாகியது.
காசநோயால் அவதிப்பட்டு வந்த கல்கி, 1954 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 ஆம் தேதி, 55 வயதிலேயே காலமானார்.
புதினங்கள்
1. கள்வனின் காதலி (1937)
2. தியாகபூமி (நாவல்) (1939)]
3. பார்த்திபன் கனவு (1941 - 1943)
4. மகுடபதி (1942)
5. சிவகாமியின் சபதம் (1944 - 1946)
6. அபலையின் கண்ணீர் (1947)
7. சோலைமலை இளவரசி (1947)
8. அலை ஓசை (1948)
9. தேவகியின் கணவன் (1950)
10. மோகினித்தீவு (1950)
11. பொய்மான் கரடு (1951)
12. புன்னைவனத்துப் புலி (1952)
13. பொன்னியின் செல்வன் (1951 - 1954)
14. அமரதாரா (1954)
சிறுகதைகள் / கட்டுரைகள்
1. சுபத்திரையின் சகோதரன்
2. ஒற்றை ரோஜா
3. தீப்பிடித்த குடிசைகள்
4. புது ஓவர்சியர்
5. வஸ்தாது வேணு
6. அமர வாழ்வு
7. சுண்டுவின் சந்நியாசம்
8. திருடன் மகன் திருடன்
9. இமயமலை எங்கள் மலை
10. பொங்குமாங்கடல்
11. மாஸ்டர் மெதுவடை
12. புஷ்பப் பல்லக்கு
13. பிரபல நட்சத்திரம்
14. பித்தளை ஒட்டியாணம்
15. அருணாசலத்தின் அலுவல்
16. பரிசல் துறை
17. ஸுசீலா எம். ஏ.
18. கமலாவின் கல்யாணம்
19. தற்கொலை
20. எஸ். எஸ். மேனகா
21. சாரதையின் தந்திரம்
22. கவர்னர் விஜயம்
23. ஒன்பது குழி நிலம்
24. புன்னைவனத்துப் புலி
25. திருவழுந்தூர் சிவக்கொழுந்து
26. ஜமீன்தார் மகன்
27. மயிலைக் காளை
28. ரங்கதுர்க்கம் ராஜா
29. இடிந்த கோட்டை
30. மயில்விழி மான்
31. நாடகக்காரி
32. கணையாழியின் கனவு
33. கேதாரியின் தாயார்
34. காந்திமதியின் காதலன்
35. சிரஞ்சீவிக் கதை
36. ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
37. பாழடைந்த பங்களா
38. சந்திரமதி
39. போலீஸ் விருந்து
40. கைதியின் பிரார்த்தனை
41. காரிருளில் ஒரு மின்னல்
42. தந்தையும் மகனும்
43. பவானி, பி. ஏ., பி. எல்.
44. கடிதமும் கண்ணீரும்
45. வைர மோதிரம்
46. வீணை பவானி
47. தூக்குத் தண்டனை
48. என் தெய்வம்
49. எஜமான விசுவாசம்
50. இது என்ன சொர்க்கம்
51. கைலாசமய்யர் காபரா
52. லஞ்சம் வாங்காதவன்
53. ஸினிமாக் கதை
54. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
55. ரங்கூன் மாப்பிள்ளை
56. தேவகியின் கணவன்
57. பால ஜோசியர்
58. மாடத்தேவன் சுனை
59. காதறாக் கள்ளன்
60. மாலதியின் தந்தை
61. வீடு தேடும் படலம்
62. நீண்ட முகவுரை
63. பாங்கர் விநாயகராவ்
64. தெய்வயானை
65. கோவிந்தனும் வீரப்பனும்
66. சின்னத்தம்பியும் திருடர்களும்
67. விதூஷகன் சின்னுமுதலி
68. அரசூர் பஞ்சாயத்து
69. கவர்னர் வண்டி
70. தண்டனை யாருக்கு?
71. சுயநலம்
72. புலி ராஜா
73. விஷ மந்திரம்
74. ஏட்டிக்குப் போட்டி - நகைச்சுவை கட்டுரைகள்
75. சங்கீத யோகம் - தமிழிசை குறித்த கட்டுரைகள் (1947)
குறைவாக பார்க்க